தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 11 maart 2013

மட்டக்களப்பில் இன வன்முறையைத் தூண்டவே அநாமதேய துண்டுப் பிரசுரங்கள்: கோ.கருணாகரம்


இனங்களிடையே இனரீதியான வன்முறையை தூண்டும் வகையில் பொதுபலசேனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பவர்களே மட்டக்களப்பில் வெளியாகியுள்ள அநாமதேய துண்டுப் பிரசுரங்களின் பின்னணியிலும் இருப்பதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) தெரிவித்தார். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளியாகிக்கொண்டிருக்கும் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலத்தில் பிட்டும் தேங்காய்ப் பூவுக்கும் ஒப்பிட்டு பேசப்பட்டுவந்த உறவுகள் சீர்குலைந்து பல இன்னல்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
கடந்த கால குரோதங்கள் காரணமாக வீரமுனைப் படுகொலை, காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகளைச் சந்தித்த எமது தமிழ் பேசும் இனம் மீண்டும் ஒரு தடவை அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை எண்ணிப்பார்ப்பதையே தவிர்த்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இனங்களுக்கும் இடையில் மீண்டும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் எறியப்பட்டு வருகின்றன.
பொதுபலசேனா என்ற அமைப்பு இந்த நாட்டில் இனங்களிடையே கலவரத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இதனை நான் நோக்குகின்றேன்.இதன் பின்னணியில் பொதுபல சேனா என்ற பெயரில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருபவர்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் அரசியல் வங்குரோத்து நிலையில் இருப்பவர்களின் செயற்பாடாகவே இதனை நாங்கள் நோக்கவேண்டியுள்ளது.தமிழ் மக்கள் இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்.
இந்த மாவட்டத்தில் மீண்டும் ஒரு தடவை இனக்கலவரம் ஏற்பட்டு இனங்களிடையே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமை ஏற்படாமல் இருக்க அனைவரும் உறுதியுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten