[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 06:13.07 AM GMT ]
விடுதலைப் புலிகளை வேருடன் அழித்து விட்டதாக கூறிய அரசாங்கம், போர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாட்டுக்குள் பயங்கரவாத இருக்கின்றது என காண்பிக்க முயற்சித்து வருகிறது.
போர் முடிவடைந்து 5 வருடங்கள் கழிந்துள்ள போதிலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவில்லை.
இதனால் அரசாங்கம் கூறிய கோபி போன்ற இளைஞர்கள் உருவாகுவதை தவிர்க்க முடியாது எனவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkq6.html
தமிழ் கூட்டமைப்பை தடை செய்வதோ அல்லது எம்மைக் கைது செய்வதோ ஜனநாயக விரோத செயல்!- அனந்தி சசிதரன்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 06:25.00 AM GMT ]
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மேல் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜாதிக ஹெல உறுமய அமைப்பினை சேர்ந்த உதய கம்மன்பில தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் எனவும் நான் உட்பட பாரளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது ஒரு தனி நபர் ஒருவரின் கருத்தென்றோ அல்லது இனவாத அமைப்பான ஜாதிகஹெல உறுமயவின் கருத்தென்றோ புறமொதுக்கி விடமுடியாது.
ஏனெனில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளாரல் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்பட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
நான் நடந்து முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் எண்பத்தெண்ணாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் வாக்குகளால் மாகணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவள்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் எனக்கு வாக்களித்த அந்த மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் உரிமை பெற்றவள்.
எமது மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும், தொடர்ந்து இழைக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க கடமைப்பட்டவள்.
அப்படி நான் குரல் கொடுப்பது குற்றமாகக் கருதப்படுமானால் இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவதில் எந்த ஒரு அர்த்தமும் இருக்கமுடியாது.
இலங்கையில் எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் பற்றி நான் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்தமையே என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.
இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட முடியாத நிலையில் தான் நான் சர்வதேச அரங்கில் முறையிட நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்ற உண்மையை எவரும் மறந்துவிட முடியாது.
நான் எனது கணவரை எனது பிள்ளைகள் முன்னிலையில் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். இன்று வரை ஐந்து ஆண்டுகள் ஆகின்ற போதிலும் அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை கூட என்னால் அறிய முடியவில்லை.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில், காணாமற் போனோhர் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் குழுவில் என அனைத்திடங்களிலும் நாம் முறையிட்டோம்.
எத்தனையோ வீதி போரட்டங்களை நடத்தினோம். ஆனால் எவ்வித பலனும் கிட்டவில்லை.
இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதி அல்ல. இந்த நாட்டில் வாழும் எத்தனையோ தமிழ் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை.
இதற்கு இந்த அரசாங்கத்தாலோ எம்மேல் தேசத் துரோகிகள் எனக் குற்றம் சாட்டுபவர்களாலோ என்னைக் கைதுசெய்ய வேண்டுமெனக் குரல் கொடுப்பவர்களோலோ பதில் தரமுடியவில்லை. அவர்கள் பதில் தருமளவுக்கு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவுமில்லை.
இப்படியாக இந்தநாட்டின் எல்லைக்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட முடியாத நிலையில் நாம் சர்வதேச அரங்கில் முறையிடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.
ஆனால் அதிகார மமதையும் ஆட்சியாளர்கள் என்ற வலிமையும் எம்மை தேச விரோதிகளாக காட்ட முயல்கின்றன.
எமது தேசம் மனிதஉரிமைகளை மதிக்கவில்லை எனவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்கின்றது எனவும் சர்வதேசம் குற்றம் சாட்டும் வகையில் ஒரு ஆட்சியை நடத்தி எமது நாட்டை அவமானப்படுத்துவதற்கு உடந்தையானவர்களா?அல்லது நீதி நிலைநாட்டப்படுவதன் மூலம் எமது தேசம் பெருமைப்படுத்தப்பட வேண்டுமென எதிர்பார்ப்பவர்களா தேசத் துரோகிகள் என நான் கேள்வி எழுப்புகின்றேன்.
நாம் இந்த நாட்டை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்களோ, மனநோயாளர்களோ அல்ல. நாம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை தான் கேட்கின்றோம்.
சரணடைந்த, காணாமற் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியத் துடிக்கின்றோம். எங்கள் கோரிக்கைகளுக்கு விடை தர வேண்டியது ஆட்சி அதிகாரத்திற்குள் உள்ளவர்களின் மறுக்க முடியாத கடமை.
ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பொறுப்புக்கூறல் என்ற புனித கடமை புறந்தள்ளப்பட்டுள்ளது. முற்றாக எம்மீதான ஒடுக்குமுறைகள் பல்வேறு முறைகளில் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
தேடுதல் வேட்டைகள் சுற்றிவளைப்புகள் கைதுகள் என எம்மக்கள் ஒவ்வொரு விநாடியையும் அச்சத்தில் கழிக்க வேண்டிய அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
எம்மீது இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நியாயம ;வழக்கவேண்டியவர்களே மேலும் மேலும் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் போது நாம் சர்வதேச அரங்கில் முறையிட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.
எம்மை கைது செய்வதன் மூலம் எமது குரலை அடக்கிவிட முடியும் என எவராவது நினைத்தால் அது தவறான கணீப்பீடாகும். எம்மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளை கூட உலக அரங்கில் பாரிய எதிர்விளைவுகளை கொடுக்கும் நிலமையையே தேடும். சர்வதேச முனைப்பை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவையை உருவாக்கும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பெரும்பான்மையான தமிழ் மக்களால் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி. நானோ சக பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களோ மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வதோ எம்மை கைது செய்வதோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரும் உரிமையைக் கூட மறுக்கும் ஜனநாயக விரோத செயலாகும்.
இதை இன ஒடுக்குமுறையாளர்கள் புரிந்;து கொள்ளத் தவறினால் அதற்கான விலையை அவர்கள் கொடு;;;க்கவேண்டிய நிலையே ஏற்படும்.
நாம் நாட்டையும் எமது இனத்தையும் நேசிக்கின்றோம். இந்நாடு சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமென விரும்புகின்றோம்.
இந்நாடு ஜனநாயக விரோதப் பாதையில் செல்வதற்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுத்து கௌரவத்தை பாதுகாப்போம் என உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkry.html
Geen opmerkingen:
Een reactie posten