தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 maart 2013

ஐ.மு.கூட்டணி மற்றும் மத்திய அரசிலிருந்து திமுக உடனடியாக விலகுவதாக கருணாநிதி அறிவிப்பு


மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்துக் கூற முடியாது!- சோனியா காந்தி
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 07:26.21 AM GMT ]
இந்திய மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று திமுகவின் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இப்போதைக்கு கருத்து எதுவும் சொல்ல இயலாது என்று மட்டும் கூறியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் பேசிய சோனியா காந்தி, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக இந்தியா உறுதியான நிலைப்பாட்டுடன் எதிர்க்கும்.
இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார்.


ஐ.மு.கூட்டணி மற்றும் மத்திய அரசிலிருந்து திமுக உடனடியாக விலகுவதாக கருணாநிதி அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 05:54.04 AM GMT ]
ஐ.மு.கூட்டணியில் இருந்தும், மத்திய அரசிலிருந்தும்  திமுக உடனடியாக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போக விட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை.
எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது என்றார்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என்று தி முக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் விலகல் கடிதத்தை இன்று உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழப் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி காரணம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக அமைச்சர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தி.மு.கவின் ஐந்து அமைச்சர்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் டெசோ தொடர்ந்து ஈடுபடும் என்றும், தமது தலைமையிலான டெசோ குழு ராஜபக்சவை சந்தித்து பேசும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மம்தா பெனார்ஜி தலைமையிலான திரிணாமூல் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி இருந்தது. திரிணாமூல் கட்சியில் 4 அமைச்சர்கள் இருந்தனர்.




கருணாநிதியின் விலகல் அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை: ஜெயலலிதா
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 09:41.41 AM GMT ]
இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணாத் துயரங்களுக்கு எல்லாம் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.
எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
2009-ம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி. அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவோ நடவடிக்கை எடுக்காமல், மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தி தமிழர்களை ஏமாற்றியவர் கருணாநிதி.
இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று பிரகடனப்படுத்தி தமிழினத்தை நம்ப வைத்து பதுங்குக் குழிகளில் பாதுகாப்பாக இருந்த இலங்கைத் தமிழர்களை வெளிவரச் செய்து அவர்கள் அனைவரும் ஈவுஇறக்கமின்றி இலங்கை அரசின் குண்டு மழையினால் கொன்று குவிக்கப்பட்டதற்கு கருணாநிதிதான் காரணம்.
இந்தச் சமயத்தில் கருணாநிதி மத்திய அமைச்சரவைக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். இதை கருணாநிதி செய்யவில்லை. இது தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய துரோகம்.
இதைத்தான் செய்யவில்லை என்றாலும், இலங்கைக்கு எதிராக மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்து போர்க் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது தலைமையிலான அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவாவது மத்திய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். இதையும் கருணாநிதி செய்யவில்லை. இது கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இழைத்த இரண்டாவது துரோகம்.
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட ஓரளவு வலுவான தீர்மானத்தை இந்திய அரசு வலுவிழக்கச் செய்த போதாவது கருணாநிதி அதனைக் கண்டித்து இருக்க வேண்டும். கருணாநிதி இதிலும் தான் ஏமாற்றப்பட்டதாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ததே இந்தியாதான் என்று பட்டவர்த்தனமாக அனைவருக்கும் மத்திய அரசே பாரதப் பிரதமரின் கடிதத்தை வெளியிட்டு தெரியப்படுத்தியது.
அப்போதும் கருணாநிதி அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.
ஒருவேளை, அவ்வாறு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போக செய்த சூழ்ச்சியில் கருணாநிதிக்கும் பங்கு உள்ளது போலும்! எனவேதான் அதைப்பற்றி அப்போது அவர் எதையும் சொல்லவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
இவ்வாறு மத்திய அரசை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணாத் துயரங்களுக்கு எல்லாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும், இப்பிரச்சனையில் இந்தியா வலுவான வரலாற்று சிறப்புமிக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், அந்தத் தீர்மானத்தை வலுவடையச் செய்ய என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் நான் விரிவான கடிதம் ஒன்றை பாரதப் பிரதமருக்கு நேற்று எழுதியுள்ளேன்.
இந்த நிலையில், நேற்று ஏ.கே. அந்தோனி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்ததும் கருணாநிதி அளித்த பேட்டியில், இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், வலுவான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால்தான் இலங்கைக்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால், கருணாநிதி, இந்திய நாடாளுமன்றத்தில் இதைப்போன்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
அவரது இன்றைய  பேட்டிக்குப் பின் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 21ம் தேதி வரை காலம் இருப்பதாகவும், அதற்குள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.க. தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் உறுதியான பயனளிக்கக் கூடியது அல்ல. மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக்கூட்டத்தில்தான் தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதுவும் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இதுபோன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். மீண்டும் கொண்டு வரப்பட்ட டெசோ அமைப்பிற்கு மக்களிடமும், மாணவர்களிடமும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தற்போது அரங்கேற்றியுள்ள நாடகத்தின் மூலம் தன் மீது ஏற்பட்டுள்ள நீங்காத பழியை குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் நிறைவேறாது. இந்த கபட நாடகங்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்பது திண்ணம்.
இவ்வாறு ஜெயலலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



திமுக, மத்திய அரசிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது நாடகம் என்கிறார் சுப்பிரமணிய சுவாமி
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 09:25.23 AM GMT ]
இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளாததால் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பதை நாடகம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தில் இந்தியா வலுவான திருத்தங்களை மேற்கொள்ள திமுக வலியுறுத்தியது.
ஆனால் திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த திமுக, ஏற்கெனவே அறிவித்தபடி மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, திமுகவின் முடிவு ஆச்சரியப்படக் கூடியது அல்ல.. இது நல்ல நாடகம். அவர்கள் ஜெயலலிதாவைக் கண்டு பயப்படுகின்றவர்கள்.
அடுத்த ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ மீண்டும் மத்திய அரசில் திமுக இடம்பெறக் கூடும்.
மதவாதக் கட்சி ஆட்சிக்கு வரக் கூடாது என்று கூறிக் கொண்டு மீண்டும் காங்கிரஸ் அரசில் திமுக சேரும்.
இதுதான் நடைபெறப் போகிறது என்றார். 

Geen opmerkingen:

Een reactie posten