தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பேசுவதற்காக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் ஷியா பிரிவைச் சேர்ந்த சையிது கல்பே ஜவாத் நக்வி சென்னை வந்திருந்தார்.
1966-ம் ஆண்டு லக்னோவில் பிறந்த இவர்... உலாமா கவுன்சில் உறுப்பினர், தன்ஸீம்-இ-பஸ்டரன்-இ-ஹுஸைன் நிறுவனத்தின் நிறுவனர் எனப் பல்வேறு பொறுப்புகளையும் வகிக்கிறார்.
அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தியதற்காக, 144 தடை உத்தரவை எதிர்த்துக் கூட்டம் போட்டதற்காக... எனப் பலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லக்னோ நகரில் ஒரு மில்லியன் மக்கள் கலந்துகொண்ட அமெரிக்க, இஸ்ரேல், டென்மார்க் நாடுகளுக்கு எதிரான பேரணியைத் தலைமை தாங்கி நடத்தியவர்.
அவரிடம் பேசினோம்.
''இஸ்லாம் என்றால் 'அமைதி’ என்று பொருள். இஸ்லாம் மார்க்கம் அமைதியின் மார்க்கம். அது ஒருபோதும் தீவிரவாதத்தை அனுமதிப்பது இல்லை. ஜிகாத் என்ற பெயரில் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக்கொள்வதற்கு இஸ்லாம் மார்க்கம் பொறுப்பு அல்ல.
உயிர்ப்பலி என்பது கூடாது என்றுதான் இஸ்லாம் போதிக்கிறது. கிறிஸ்தவம், இந்து, பௌத்தம் ஆகிய மதங்களும் அதையே சொல்கிறது.
பௌத்தத்தைக் கடைப்பிடிக்கும் சிங்கள அரசு செய்திருக்கும் போர்க் குற்றங்கள் மனித உரிமையை மீறிய செயல். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒரு குழுவுக்கும் அரசுக்கும் போர் நடந்து, போரில் வெற்றி கொண்டோம் என்று அரசு அறிவித்த பிறகு... அந்தக் குழு சம்பந்தப்பட்டவர்களையோ, அவர்களது உறவுகளையோ துன்புறுத்துவது, கொல்வது என்பது மனிதாபிமானத்துக்கும் மனித நேயத்துக்கும் எதிரான செயல்.
அதே நேரத்தில், இலங்கை அரசு மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் செயல், இரட்டை வேடம்.
இலங்கையில் அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் அதே அமெரிக்கா... பாலஸ்தீனம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் எல்லையில் தனது வான் படை மூலம் தாக்குதல் நடத்தி, லட்சக்கணக்கான குழந்தைகளைக் கொன்று குவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவை யாரும் கண்டிக்கவில்லை. தன்னால் அடிமைப்படுத்த முடியாத ஈரான் மீது அடுக்கடுக்கான பொருளாதாரத் தடையை விதித்து வருவதால், அங்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் இறந்துகொண்டே இருக்கிறார்கள்.
இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு, ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கிறது அமெரிக்கா.
அல்கொய்தாவையும் தாலிபன்களையும் உருவாக்கிய அமெரிக்கா, அவர்களுக்கு நிதி உதவியும் ஆயுதமும் அளித்து தனது தேவைக்காகப் பயன்படுத்தியது.
இன்று அவர்களை அழித்தொழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்று வருகிறார்கள்.
லெபனான் மீது இஸ்ரேல் மூலமாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, குழந்தைகள் பலியானது அமெரிக்காவுக்குத் தெரியவில்லை.
உலகில் மக்களை அதிகமாகக் கொல்வதும் மனித உரிமைகளை மீறுவதும் அமெரிக்காதான்.
உலகில் இருக்கும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கு ஆயுதமும் நிதியுதவியும் அளிப்பது அமெரிக்காதான்.
எனவே மனித உரிமைகள் குறித்துப் பேச அமெரிக்காவுக்கு அருகதை இல்லை. இது, அமெரிக்காவின் கபட நாடகம்.''
இவ்வாறு தீர்க்கமாகப் பேசினார் ஜவாத் நக்வீ!
ஜூனியர் விகடன்
http://news.lankasri.com/show-RUmryDSXNYhu6.html
இலங்கை - இந்தியா - அமெரிக்கா கூட்டுச் சதி! - விளக்குகிறார் வேல்முருகன்
[ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 02:35.43 AM GMT ]
கேள்வி: அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் தமிழர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்குமா?
பதில்: ராஜபக்ச அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தால் என்ன நடந்துவிட்டது? போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தண்டிக்க வேண்டும் என்பதெல்லாம் என்ன ஆனது?
இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகும், தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது. இளைஞர்கள் திடீர் திடீரென்று கைதுசெய்யப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. தமிழர் பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
போர் நடைபெற்ற பகுதிகளில் புனரமைப்பு செய்ய இந்தியாவும் உலக நாடுகளும் கொடுத்த நிதியில், போரில் பலியான சிங்கள வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஊனமுற்ற சிங்கள வீரர்களுக்கு மறுவாழ்வு என்று பல பணிகள் நடக்கின்றன.
ஆனால், ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. 10 கோடி உலகத் தமிழர்களையும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களையும் இலங்கை - இந்தியா - அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டுசேர்ந்து ஏமாற்றி வருகிறது.
கேள்வி: அமெரிக்கத் தீர்மானத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறீர்களா?
பதில்: கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்காவே கவலை தெரிவித்துள்ளது.
ஆனால், அதே அமெரிக்காதான் மார்ச் 7-ம் திகதி அன்று, இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த ஐந்து லட்சம் அமெரிக்க டாலர் நிதிஉதவி அளித்துள்ளது. இந்திய அரசும் பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்தியா முன்னின்று நடத்திய ஈழத் தமிழர் இனப் படுகொலையை அமெரிக்காவும் ஐ.நா. சபையும் மௌனமாக வேடிக்கை பார்த்தது. சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கவே இலங்கைக்கு உதவுவதாக இந்தியா நாடகமாடுகிறது. இந்த சர்வதேச அரசியல் நாடகத்தை தமிழ் தேசிய சக்திகள் புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி: இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று அமெரிக்கா இப்போது வலியுறுத்தியுள்ளதே?
பதில்: அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய அதிகாரிகள், கடந்த மாதம் வவுனியாவில் முகாமிட்டு இலங்கை இராணுவத்தினருக்குப் போர்ப் பயிற்சிகளை அளித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ஆட்டம் ஓய்ந்துவிட்டது. அதாவது, அமெரிக்காவின் ஈராக் பங்களிப்பு முடிந்துவிட்டது. அதனால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிக் கவனத்தைத் திருப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கு இந்தியா உற்ற துணையாக இருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இலங்கையைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எனவேதான், அமெரிக்கா இப்போது கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா கூறிய திருத்தத்துடன் தாக்கல் செய்துள்ளது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், இலங்கையின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்துவிட முடியாது.
இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அமெரிக்காவுக்கு அக்கறை இருந்தால், ஐ.நா. தலைமையில் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை, இலங்கைத் தமிழர்களுக்கு இறுதி அரசியல் தீர்வு காணும் வரை பொருளாதாரத் தடை தனித் தமிழீழம் அமையப் பொது வாக்கெடுப்பு ஆகிய தீர்மானங்களை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். இதற்கு இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்.
கேள்வி: விடுதலைப் புலிகள்தான் தங்கள் எதிரி, ஈழத் தமிழர்கள் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறதே?
பதில்: ஈழத் தமிழர்கள் மீது மட்டுமல்ல... இந்தியாவில் வாழும் தமிழர்கள் மீதே அவர்களுக்கு அக்கறை இல்லை. இதுவரை 650-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. அதைக் கேட்க நாதியில்லை.
பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைபற்றி, நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கொதித்தெழுந்தன. ஆனால், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மௌனமாகவே இருந்தார்.
இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழியட்டும்.
2011-ல் தெற்கு சூடான் பிறந்ததுபோல, ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்கட்டும். இவ்வாறு காங்கிரஸுக்கு சவால்விடுகிறார் வேல்முருகன்.
ஜூனியர் விகடன்
http://news.lankasri.com/show-RUmryDSXNYhu2.html
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்து பலவீனப்படுத்த இந்தியா கடும் முயற்சி
[ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 12:02.02 AM GMT ]
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை திருத்தவும், திமுக கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கும் சமநிலையை ஏற்படுத்துவதற்கு தற்போது இந்தியா போராடுவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுக, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இராஜதந்திர ரீதியாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதேவேளை, அமெரிக்க தீர்மான வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மை கண்டறியும் பொறிமுறை திட்டத்தை புதுடெல்லி ஆதரிக்கவில்லை.
இதுபோன்ற வெளியக தலையீடுகள், மனிதஉரிமை விவகாரங்களில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு முரணானது என்றும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன என்றும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmryDSXNYhs4.html
Geen opmerkingen:
Een reactie posten