யாழ்.தெல்லிப்பளை- முல்லைத்தனை கிராமத்தில் 3 வீடுகளை இடித்து கட்டிடப் பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவத்துடன் படையினருக்குத் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட இந்தப் பகுதியில், அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமைப்படுத்தப்படாமலிருந்த நிலையில் மக்கள் முழுமையாக மீள்குடியேறாத நிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாகனத்தில் வந்து குறித்த 3 வீடுகளையும் உடைத்து கட்டிடப் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.
கடந்த 24வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள், முடக்கப்பட்டிருந்தமையினால் பற்றைகள் வளர்ந்தும், சேதங்கள் ஏற்பட்டும் இருந்த இந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காக பற்றைகளை வீட்டின் உரிமையாளர்கள் அண்மையில் அகற்றியுள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த வீடுகளை இடித்து கல், உட்பட கட்டிடப் பொருட்கள் அனைத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றனர்.
எனினும் இந்தச் சம்பவத்திற்கும் படையினருக்கும் தொடர்பிருக்கலாம் என்றே மக்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வீடுகளை இடித்து கட்டிடப் பொருட்களை எடுத்து முகாம்களை அமைத்துவரும் படையினர், அவ்வாறான நோக்கத்திற்காகவே இந்த வீடுகளையும் இடித்திருக்கலாம் எனவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten