அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசுக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைகள் என்னும் நோக்கங்களுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை கொண்டு அரசாங்கம் இவ்வார்ப்பாட்டத்தினை நடாத்தியுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, பகுதிகளில் இருந்து பஸ்களில் ஏற்றி வரப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளைக் கொண்டு கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் அமெரிக்காவுக்கும் ஜெனீவாத் தீர்மானங்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்படி அமெரிக்கா, ஜெனீவா எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகில் இருந்து A9 வீதியால் டிப்போ சந்தியை நோக்கி நடந்து சென்று அச்சந்திக்கு அருகில் அமைக்கப்பட்ட மேடையில் அமெரிக்காவுக்கும் ஜெனீவாவுக்கும் எதிரான கோசங்களுடன் நடைபெற்றது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கீதாஞ்சலி,
“அமெரிக்காவே நீ உனது வேலையைப் பார்த்துக்கொள்”, “எமது வேலையை நாம் பார்த்துக்கொள்வோம்”,
“எமது நாட்டு உள்விவகாரங்களில் உனது நலனுக்காக தேவையற்று தலையிடாதே”,
“போர் நடைபெற்ற போது மக்களை அழிப்பதற்கு ஆதரவு வழங்கி விட்டு இப்போது எங்கள் மக்களை நிம்மதியாக வாழவிடாமல் தடுப்பதற்கு முயற்சிக்காதே”,
“எங்கள் தலைவன் மகிந்த ராஜபக்சாவே, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது”,
எங்கள் சரித்திர நாயகன் மகிந்தவே
என்று கூறி பெருங்கோசங்களை எழுப்பியிருந்தார்.
சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் மேடையில் ஏறி தான் இந்த நாட்டுக்காக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராடி புனர்வாழ்வு பெற்று இப்போது சிவில் பாதுகாப்பு படையில் இணைந்து தான் வளமாக வாழ்வதாக கூறி அமெரிக்காவுக்கும் ஜெனீவாத் தீர்மானங்களுக்கும் எதிரான கோசங்களை எழுப்பியிருந்தார்.
மேற்படி இவ்வார்ப்பாட்டத்தில் வயிற்று பிழைப்புக்காக சிவில் பாதுகாப்பு படையில் வேலைக்கு சென்று இப்படியான ஆர்ப்பாட்டங்களில் கட்டாயப்படுத்தப்பட்டு கலந்து கொள்கின்றோம் என்றும் பல இளைஞர் யுவதிகள் கூறி வேதனைப்பட்டும் கொண்டார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten