தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

ஈழத்தமிழர் பிரச்சினை!- கூட்டணி கட்சிகளின் கருத்தைக்கேட்டு மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்: கி.வீரமணி


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கூட்டணி கட்சிகளின் கருத்தைக்கேட்டு மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்திய நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் தி.மு.க. கொடுத்திருந்த தீர்மானத்தினையட்டி நடைபெற்ற விவாதத்தில் காங்கிரசை தவிர, மற்ற அத்தனை கட்சிகளும், இந்திய அரசின் நிலைப்பாடு உறுதியாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, இறுதியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உரை உப்புச்சப்பு இல்லாத இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடாகவே அமைந்த காரணத்தால் தி.மு.க. தொடங்கி அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு செய்து தங்களது ஒட்டு மொத்த எதிர்ப்பினை காட்டும் வகையில் அதை பதிவு செய்தனர்.
இந்த சுவரெழுத்தை பாடமாகக் கற்று கொண்டிருக்க வேண்டாமா ஆளும் காங்கிரஸ்? கூட்டணி தர்மமாகுமா? இன்னும் கேட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கையாக ஆட்சியின் வெளியுறவுக்கொள்கையோ, உள்நாட்டு திட்டங்களோ அமைய வேண்டுமே தவிர, பெரிய கட்சியாகிய காங்கிரஸ் கட்சியின் வெளியுறவு கொள்கையாகவே இருக்கலாமா? இது கூட்டணி தர்மமாகுமா?
கூட்டணி அரசு இருப்பதற்கு முக்கிய ஆதரவு கட்சியாகிய தி.மு.க.வின் கருத்தை அறிந்து, கூட்டணிக் கட்சிகளை அதன் தலைவர்களை அழைத்து இலங்கை பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினையை இந்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.
டெசோவின் தலைவர் கலைஞர் மத்திய அரசுக்கு உருக்கமாக விடுத்துள்ள அறிக்கையில், மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடித்திருந்தால் பண்டித நேரு தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் பிரச்சினையில் தலையிட்டிருக்க முடியுமா?
வங்காளதேசத்தில் விடுதலை வீரர் முஜிபூர் ரகுமானுக்கு அன்னை இந்திரா காந்தி உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற கேள்விகளையெல்லாம் வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வரும் உலகத் தமிழர்கள் கேட்க மாட்டார்களா? என்று கூறியுள்ளார்.
எனவே மத்திய அரசு தனது இலங்கை ஆதரவுப் போக்கை மாற்றிக் கொள்ளவே இன்று பொது வேலை நிறுத்தம் முழு அடைப்பு என்ற அறவழி, அன்பு வழிப்போராட்டம் அரசியல் பார்வையின்றி மனித நேயத்தோடு இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten