தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

இலங்கைக்கு எதிராக 4வது நாளாக நீடிக்கும் தமிழக மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது !


இலங்கைக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் நடந்துவரும் போர் குற்றங்களை சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும், தமிழர்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகளை தடுக்க கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். தற்போது அந்த போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. கையெழுத்து இயக்கத்தை லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 34 மாணவர்களில் 5 பேர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 29 மாணவர்கள் 4வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் 2ஆவது நாளாக உண்ணாவிரதம்
தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் 2ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் வலுவற்றது என குற்றம்சாட்டிய மாணவர்கள், இலங்கை அரசை தண்டிக்கும் வகையில் புதிய தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அதிபர் ராஜபக்சவை தண்டிக்க ஐ.நா. மனித உரிமை அவை நடவடிக்கை எடுக்கக் கோரி, கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் 54 பேரும் 2ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினர். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம்கேட்டு தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வல்லம் விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள கல்லூரி மாணவர்கள்:
சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள், நெல்லை சேவியர் கல்லூரி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவர்கள், திருச்சி சட்டக்கல்லூரி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள், சிவகங்கை அழகப்பா கலைக் கல்லூரி மாணவர்கள், புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களின் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கும்பகோணத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தைத் நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளனர்.
உணர்வால் ஒன்றுபட்டு.....
இலங்கையின் போர்க்குற்றங்களை கண்டித்தும், அவற்றுக்கு நீதி கேட்டும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்களின் மூலம் சர்வதேச அளவில் இலங்கை மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். இவர்களில் கோவையில் நடக்கும் மாணவர் போராட்டத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஒரு போராட்டக்காரர்.
ஜெகதீஷ், உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைந்ததுமே கைதட்டல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அவரை உண்ணாவிரதம் இருக்கும் மற்ற மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்று ஊக்குவிக்கிறார்கள்.. யார் இந்த ஜெகதீஷ். அவருக்கு எதற்கு இத்தனை வரவேற்பு என்று ஆச்சரியப்படுபவர்களை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இவர்.. நடமாட இயலாத அளவுக்கு மாற்றுத்திறனாளியான இந்த 21 வயது இளைஞர், தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். லொயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலையில் கடந்த 3 நாட்களாக வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்த ஜெகதீஷ், கோவை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்து அவர்களுடன் இணைந்திருக்கிறார்.
இணையவழியில் கருத்துக்கள் பதிவு:
10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், கோவை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு கணினி பயிற்சி கொடுப்பது, தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று தீவிரமாக இருக்கும் இவர், ஈ மேனேஜ்மெண்ட் என்ற மின்னணு நாளிதழில் இணையாசிரியராகவும் இருக்கிறார். இலங்கை தமிழர்களுக்காக பேஸ்புக், ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகளை செய்துவரும் ஜெகதீஷ், ஐநாவுக்கும் அடிக்கடி ஈமெயில் மூலம் வேண்டுகோள்களை விடுத்துவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். உடல்நிலை காரணமாக 3 வேளையும் உணவைதவிர்க்க முடியாத சூழலில் உள்ளபோதும், அதனை மறுக்கும் ஜெகதீஷ்.. தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
கோவை மாணவர்களின் எழுச்சி:
கோவையில் மொத்தம் 2 இடங்களில் மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. அங்குள்ள மதிமுக அலுவலகத்தில் 18 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.. பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் 24 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தினமும் ஏராளமான மாணவர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.. போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, மாணவர்கள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பி தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.

http://news.lankasri.com/show-RUmryDSYNYgq7.html

Geen opmerkingen:

Een reactie posten