யாழ்ப்பாண ஊடகவியலாளர், இரத்தினம் தயாபரன் இன்று காங்கேசன்துறையில் இயங்கிவரும் வடமாகாண விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். சுமார் மூன்றரை மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு மாதங்களாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், காவல்துறை விசாரணைகளை அவர் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்தநிலையில் இன்று அவர் வடமாகாண விசேட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. காலை பத்து மணிக்கு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகி சுமார் பிற்பகல் ஒன்றரை தாண்டியும் அது நீடித்ததாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், ஓமந்தையில் கஞ்சா பொட்டலம் வைக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள், கொழும்பு மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்களுடனான தொடர்பாடல்கள், மனித உரிமை அமைப்புக்களுடனான செயற்பாடுகள், மற்றும் 16 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் என்பன தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரியவருகிறது. |
Geen opmerkingen:
Een reactie posten