பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான 13 வயதான விபூஷிகா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது மகன் உட்பட காணாமல்போனவர்கள் பற்றி தகவல்களை வெளியிடுமாறு வலியுறுத்தி ஜெயக்குமாரியும் அவரது மகளும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களில் நடைபெற்ற பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேக நபர் ஒருவர் மறைந்திருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து தேடுதல் நடத்துவதற்காக சென்ற கிளிநொச்சி பொலிஸார் மீது இவர்களில் வீட்டில் மறைந்திருந்தாக கூறப்படும் நபர் துப்பாக்கி பிரயோகம் செய்தார்.
இதனையடுத்தே ஜெயக்குமாரியும் அவரது மகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கடந்த வருடம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் தாயும் மகளும் கலந்து கொண்டனர். இவர்களின் வீட்டில் அரசாங்கத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரங்களும், சில ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயக்குமாரி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது மகள் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டதை போல் தாமும் கைது செய்யப்படலாம் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ. சரவணபவன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளை சந்தித்துள்ளதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாய் மற்றும் மகளை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த சனிக்கிழமை வவுனியாவில் ஆர்ப்பட்டம் ஒன்றும் நடைபெற்றது.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVeq0.html
Geen opmerkingen:
Een reactie posten