கிளிநொச்சியில் கணவரை இழந்த பாலேந்திரா ஜெயகுமாரி மற்றும் அவருடைய 13 வயது மகளான விபூஸ்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலும் இலங்கைப் படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜெயகுமாரியின் வீட்டில் இருந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று சந்தேகிகப்படும் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்த பின்னர் தப்பிச் சென்றமையை அடுத்தே அந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது பொலிஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.
இதன்பின்னரே தாயும் மகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் காணாமல் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களின் போது ஜெயகுமாரியும் அவரது மகளுமே தீவிரமாக செயற்பட்டு வந்தனர்.
ஜெயகுமாரியின் இரண்டு மகன்மார் போரில் கொல்லப்பட்ட அதேநேரம் மற்றும் ஒரு மகன் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போனார்.
அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கோரியே ஜெயகுமாரியும் மகளும் ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் இன்று மாலை வரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின்பேரிலேயே இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDSYLVfo4.html
Geen opmerkingen:
Een reactie posten