தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 februari 2013

அறிந்தது இந்தியா! மகிந்தவை அன்மித்தது ஆபத்தின் அம்புகள்! தப்பிக்குமா?


அறிந்தது இந்தியா! மகிந்தவை அன்மித்தது ஆபத்தின் அம்புகள்! தப்பிக்குமா?

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும் தற்போது, ‘தூக்கும் பூதமான‘ இந்தியாவின் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் அரசியல் விவகாரப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த இந்தியா, தற்போது அதன் நடவடிக்கைகளும் அறிக்கைகளும் நெருக்கமாக கண்காணிக்கப்படுவதாக கொழும்புக்கு சில எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.
ராஜபக்ச அரசுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் இன்னொரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதும், சிறிலங்கா அதிபரின் 65வது சுதந்திரதின உரையும் இந்தியர்களை செயல்நிலைக்குத் தள்ளியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் மீளாய்வு செய்யப்படும் போது, அமெரிக்கா நடைமுறைத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று கடந்தமாத இறுதியில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்று பிரதி உதவிச்செயலர்கள், ராஜபக்ச அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தனர்.
சிலநாட்கள் கழித்து, சிறிலங்கா அதிபர் தனது சுதந்திரதின உரையில், “இன ரீதியாக இந்த நாட்டைப் பிரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது, எல்லா சமூகங்களும் சமமான உரிமைகளுடன் வாழ்வதே தீர்வாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.
அந்த அறிக்கை, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ராஜபக்ச அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கவில்லை என்ற கருத்தை உள்ளடக்கியிருந்தது.
நாட்டில் இன, மத வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், இனரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் எத்தகைய முயற்சிக்கும் இடமளிக்கமாட்டோம் என்றும் ராஜபக்ச கூறியிருந்தார்.
ராஜபக்சவின் இந்த உரையின் விளைவாகவே, அண்மையில் திருப்பதிக்கு சிறிலங்கா அதிபர் சென்றிருந்த போது, அவரை இந்தியாவின் ஆய்வு பகுப்பாய்வுப் பிரிவின் (றோ) பணிப்பாளர் அலோக் ஜோசி சந்தித்திருந்தார்.
கடந்த ஆண்டு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சாஞ்சிக்கு சென்றிருந்தபோது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்திருந்த போதிலும், அண்மைய பயணத்தில் அவரைச் சந்திக்க முடியவில்லை என்று அறியப்படுகிறது.
எவ்வாறாயினும், சிறிலங்கா அதிபரை ஜோசி சந்தித்தது, 1988இல் முன்னாள் பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை, முன்னாள் இந்தியப் புலனாய்வுத் தலைவர் ஏ.வர்மா சந்தித்ததை நினைவுபடுத்துகிறது.
றோவின் தலைவர் சந்தித்த, சிறிலங்காவின் இரண்டாவது அரச தலைவர் ராஜபக்ச ஆவார்.
திருப்பதியில் சிறிலங்கா அதிபர் தங்கியிருந்த போதே, அவரை ஜோசி சந்தித்திருந்தார்.
இதன்போது, இந்தியர்களின் சார்பில் சிறிலங்கா அதிபரிடம் ஜோசி ஒரு கடுமையான செய்தியை, ஒளிவுமறைவின்றி, வெளிப்படையாக பரிமாறியுள்ளதாக அறியப்படுகிறது.
ராஜபக்சவின் அதிகாரப்பகிர்வுக்கு எதிரான அறிக்கை, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியமை, குறித்த இந்தியாவின் அதிருப்தியை அவர் சிறிலங்கா அதிபரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
அரை மணி நேரம் நடந்த இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் பற்றிய விபரங்கள் தெரியவராத போதிலும், நாடு திரும்பிய இரண்டு நாட்களில் சிறிலங்கா அதிபர் வடபகுதிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
‘றோ‘ தலைவரின் செய்தியை விட, சிறிலங்கா மீதான அழுத்தங்களை இந்தியா அதிகரித்து வருகிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விவகாரங்களில் பரிந்துரைகளை மதிக்கத் தவறினால், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கடந்தவாரம் கூறியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு கோரி, வெளிநாட்டுத் தூதரகங்களை கருணாநிதி தலைமையிலான திமுக சந்திக்கவுள்ளதாக, இந்திய ஊடகங்கள் கடந்தவாரம் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கோரி, கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான டெசோ குழு உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு சென்றதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ செய்தி வெளியிட்டிருந்தது.
அவர்கள் இத்தாலி, மலேசியா, மொன்ரெனிக்றோ, இராஜதந்திரிகளுடன் பேசியுள்ளனர்.
திமுக தூதுக்குழு, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளையும், ரஸ்ய இராஜதந்திரிகளையும் சந்தித்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது ராஜபக்சவை ஆதரிப்பதா என்ற குழப்பம் மீண்டும் ஒருமுறை புதுடெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இது ஒரு தேர்தல் ஆண்டாக இருப்பதால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கொழும்புக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்க, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, தென்னிந்திய அரசியல்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக என்பனவற்றால், அழுத்தம் கொடுக்க முடியும்.
அரசியல்தீர்வுக்கும், தமிழர்களுக்கு சமமான உரிமைகளை வழங்குவதற்கும் இணங்கும் வரை, சிறிலங்காவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்கக் கோரும் தீர்மானத்தை இந்தியாவே ஐ.நாவில் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கவனஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டுவர திமுக அழுத்தம் கொடுக்கும் என்றும், அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அரை மணிநேர விவாதம் நடத்த அதிமுக கோரிக்கை விடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ தெரிவித்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அண்டை நாடான இந்தியா தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வரும் நிலையில், கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆதரவு திரட்டுவதற்கான நடவடிக்கைகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இறங்கியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten