தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 februari 2013

தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத இலங்கை, ஐ.நாவில் தடுமாறுகிறது..


யுத்தம் முடிந்து தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமைதான் இன்று ஐ.நாவில் இலங்கை தடுமாறுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவிப் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பி்ல் சண். குகவரதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்த கையோடு தமிழ் மக்களுக்குத் தீர்வுத் திட்டமொன்றை முன் வைப்பதாகக் கூறிய இலங்கை அரசு யுத்தம் முடிந்து நான்கு வருடங்களை எட்டிப் பிடிக்கின்ற போதும் இதுவரை தீர்வுத் திட்டம் எதுவும் இன்றி இழுத்தடித்து வருகிறது.
இலங்கையில் யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் புலிகள் யுத்த  நிறுத்தத்துக்கும் சமாதானப் பேச்சு வார்த்தைக்கும் இணங்கிய போதும் தன் ஆயுதங்களைக் கீழே வைக்காது, ஒருதலைப் பட்சமாக அரசு, புலிகள் ஆயுதங்களைக்
கீழே வைத்துவிட்டு வந்தால்தான் இனி பேச்சுவார்த்தை என்று கூறியது.
இதனால் தான் சமாதான பேச்சு வார்த்தைக்கான கதவு அடைக்கப்பட்டதற்கு அரசே முழுப் பொறுப்பும். யுத்தம் தொடரப்பட்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இதுவரையும் தமிழ் மக்களுக்கு எத்திட்டத்தையும் முன் வைக்கத் தவறியதால் ஐ.நாவில் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றுவரை தமிழ் பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அதிகரிக்கப்பட்டு இராணுவ ஆட்சி இன்னும் வடக்கு, கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலை, மற்றும் இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்துச் செல்கின்றன.
தமிழ் பகுதிகளில் புத்தர் சிலை வைப்பு, தமிழ் பெரியார்களின் சிலைகள் உடைப்பு உதாரணமாக மட்டக்களப்பில் மகாத்மாகாந்தி சிலை உடைப்பு, யாழ்ப்பாணத்தில் விவேகானந்தர்சிலை உடைத்தமை.
இதேபோன்று, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமை. தமிழ் இளைஞர் யுவதிகளை பல்வேறு காரணங்கள் காட்டி கைது செய்யப்படல் அண்மைக் காலத்தில் கூட யாழ் பல்கலைக்கழக
மாணவர்கள் கைது செய்யப்பட்டமை, காணாமல் போதல். மற்றும் சமூகச் சீரழிவுகள் போன்றவற்றிற்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிந்து இதுவரை காலமும் எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் தடுப்பு முகாம்களிலும் புனர்வாழ்வு என்னும் பெயரில் புனர்வாழ்வு முகாம்களிலும் அநாதரவாக பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தத்தின் போது, இளைஞர் யுவதிகள் என்று 40 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொல்லப்பட்டமை உலக நாடுகளின் கவனத்திற்கு சனல் 4 தொலைக்காட்சி வெட்ட வெளிச்சமாக திரையிட்டுக் காட்டியது.
2008 செப்டெம்பரில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, யுத்த களத்தை விட்டு ஐ.நா வெளியேற வேண்டும் என்ற எச்சரிக்கையை இலங்கை அரசு விடுத்தது. தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உத்திரவாதம் வழங்க முடியாது என இலங்கை கட்டளையிட்டது.
இலங்கை அரசின் கட்டளையை ஏற்று ஐ.நா பணியாளர்கள் வெளியேற முயன்றபோது, கிளிநொச்சியில் உள்ள ஐ.நா அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு வெளியேறாதே என்று கோஷமிட்டார்கள். விடுதலைப் புலிகள்தான் இவ்வாறு ஐ.நா பணியாளர்கள் வெளியேறுவதை தடுக்கிறார்கள் என்றும் அதன்மூலம் புலிகள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முனைகின்றனர் என்றும் இலங்கை அரசு அப்போது குற்றம் சாட்டியது.
ஐ.நா உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் வெளியேறியவுடன் வன்னியில் இராணுவத்தினர் தாக்குதல்களைத் தொடங்கினார்கள். பலமுனைகளிலும் யுத்த களம் திறக்கப்பட்டது. எந்தவிதமான சாட்சிகளும் இல்லாத களச் சூழலை உருவாக்கி மக்களை கொன்றொழிக்க வேண்டும் என்னும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம் என ஐ.நா கடந்த ஆண்டின் போது சுட்டிக்காட்டியமைக்கு இலங்கை பதிலளிக்காமை.
கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தமிழ் மக்களுக்கு மிகச் சிறிய அளவிலான ஆறுதல் அளிக்கக்கூடிய நிலையிலும் அதனை இதுவரை அமுல்படுத்தாது காலங்கடத்தல் போன்ற காரணங்களே ஐ.நா வில் இலங்கை
அரசாங்கம் தடுமாறும் நிலை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.
உள்நாட்டிலுள்ள மற்றோர் இனமான தமிழ் மக்களின் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் வெற்றியை பாரிய சுதந்திரப் போராட்ட வெற்றியைப் போன்று இந்த அரசாங்கம் கொண்டாடி வருவதும் யுத்த தோல்வியில் துவண்டு போயிருக்கும்
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்ற மனோ நிலையை ஏற்படுத்தகின்றது. இதுவும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாமையில் விடும் மற்றோர் அடி என்றே கூறலாம்.
ஏப்ரல் 2011 இல் இலங்கை யுத்தம் தொடர்பாக 216 பக்கங்கள் கொண்ட ஓர்அறிக்கையை ஐ.நா வெளியிட்டது. பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு தயாரித்த அறிக்கை அது. படுகொலைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், பாதுகாப்பு வளையத்தில் இருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள்.
வைத்தியசாலைகள் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றவை அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
ஐ.நாவின் ரகசிய அறிக்கையில் பல இடங்கள் கறுப்புமையினால் அழிக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ தெரியாது! இந்த அறிக்கையில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது சரியானதே என்றும் ஐ.நா இலங்கை அரசின் மீது குற்றஞ் சுமத்தப்பட்டமைக்கு இலங்கை அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூர இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று மனித உரிமை நிறுவனங்களும் சர்வதேச சமூகமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் குரல் கொடுக்கின்ற வேளையில் இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten