தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 augustus 2015

அரசியல்வாதிகளின் மாயாஜாலங்கள்

எமது இனத்தை சிதைக்க மீண்டும் சதிகள் இடம்பெறுகின்றன: வேழமாலிகிதன்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 04:58.47 AM GMT ]
கிளிநொச்சி வட்டக்கச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில், இலங்கை தமிழரசு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன் கலந்து கொண்டு.உரையாற்றினார்.
 அவர் தனது உரையில்,
மீண்டும் எங்களை நோக்கி ஒரு தேர்தல் வந்திருக்கின்றது. வழமை போலவே இந்தத்தேர்தலும் எங்களுக்கு முக்கியமாக இருக்கின்றது. கடந்த ஐந்து வருடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்திருக்கின்றது என சிலர் கேட்கின்றார்கள். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு முன்னே இருந்த இராணுவம் விலகி நிற்கின்றது. கடந்த ஜனவரி எட்டாம் திகதிக்கு பின்னே சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியில் நடவடிக்கைகள் இராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் தான் நிகழ்ந்தன என்பதை எமது மக்கள் மறந்து விடக்கூடாது. இப்பொழுது எமது பலத்தை உடைக்க சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் மாயாஜாலங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 05:58.16 AM GMT ]
பிரதான அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.
மக்களை தாஜா பண்ணி எப்படியாவது வெற்றியடைந்துவிட வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் இந்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவே பல்வேறு தரப்பினரும் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஆகாயத்திலிருந்து நிலவை கொண்டு வந்து கையில் தருவேன் என்று கூறாத அளவுக்கு சில பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் அமைந்துள்ளதாக மக்கள் பேசிக் கொள்வதையும் கூடவே கேட்க முடிகின்றது.
அதேவேளை, பெரும்பான்மை, சிறுபான்மை மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் இனவாத சக்திகள் இவற்றைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் சும்மா இருந்த இனவாத சக்திகளின் வாய்க்கு அவல் கிட்டியது போன்ற நிலைமையை உருவாக்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அதாவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் உள்ளக சுய நிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்த அதியுச்ச அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ் வாக்காளர்களைக் கவர வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு உள்ளது. இந்நிலையில், இதனை ஊதிப் பெருப்பித்து இனவாத சக்திகள் தமக்கு சாதகமான நிலைமையை உருவாக்க முனைகின்றன.
அதேவேளை, அவற்றின் கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
அண்மையில் ஐ.ம.சு.முன்னணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமெனத் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த காலத்தில் இந்தியத் தலைவர்கள் முன்னிலையில் 13 ற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென்று கூறப்பட்டவைகள் யாவும் வெறும் வெற்று வசனங்கள் என்பதையும் இது உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும், ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, கடந்த புதன்கிழமை ஸ்ரீல.சு.கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில், இவை அனைத்தையும் புரட்டிப்போடும் வகையில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதாவது, வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வுக்கு செல்ல முடியாது. அதிகாரப் பகிர்வுக்கு சென்று நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையை நாம் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம்.
தேர்தலின் பின் ஆட்சியமைக்க கூட்டமைப்பின் தயவு எமக்குத் தேவைப்படாது. நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்க்கப் போவதுமில்லை எனக் கூறியிருக்கிறார். இது பெரும்பான்மை சிங்கள மக்களை தம்பக்கம் ஈர்க்க ஐ.ம.சு.மு.வின் தந்திரமாகும்.
இதேவேளை, ரணில்- - சம்பந்தன் கூட்டணி, நாட்டை பிளவுபடுத்தும் உடன்பாட்டில் தான் கைகோர்த்துள்ளது என்றும் கூறியிருக்கின்றார். அந்தவகையில், எதிர்வரும் பிரசார நடவடிக்கைகளில் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் இவ்விவகாரத்தை ஐ.ம.சு.முன்னணி தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஐ.ம.சு.முன்னணியை பொறுத்தமட்டில் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை பிரதானமாகக் குறி வைத்தே தமது காய்களை நகர்த்தி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில் தேசிய ஒற்றுமையை முழுமையாக சீரழித்து நாட்டைப் பிரிவினையின் பாதையில் கொண்டு செல்லும் வகையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாக அண்மையில் ஐ.ம.சு.முன்னணி பகிரங்கமாகக் கூறியிருந்தது.
அதேவேளை, இனவாதத்தை தூண்டி அரசியல் செய்வதனை ஐ.ம.சு.முன்னணி உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இனவாதக் கருத்துக்களால் நாட்டைத் தீயிட முனையக்கூடாது என அமைச்சர் கயந்த கருணாதிலக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனிடையே நாட்டின் இனப்பிரச்சினைக்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் ஒற்றையாட்சி முறையின் கீழ் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென ஐ.தே. முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பொழுதோ அன்றேல், பிரசாரத்தின் பொழுதோ மேலும் ஒப்பந்தங்களின் பொழுதோ கூறும் விடயங்களை பொதுவாக எந்தவொரு கட்சியும் நடைமுறைப்படுத்தாத போக்குகளே காணப்படுகின்றன. இவை யாவும் மக்களை கவரும் ஒரே நோக்கத்திலேயே தெரிவிக்கப்படுகின்றன என்பது இதுவரை கண்ட அனுபவமாக இருந்து வருகின்றது.
இவை ஒருபுறமிருக்க, தனியார்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை மூவாயிரம் ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், 18--25 வயது வரையான இளைஞர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட துறைகளில் உயர்கல்வியைப் பெற்றுக் கொள்ள ஐம்பதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அதேபோன்று உணவுப் பொருட்களின் விலைவாசிகள் சாதாரண விலைக்கு கொடுக்கப்படுமெனவும் ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இவற்றை செயலுருப்படுத்தியிருந்தால் மக்களின் வாழ்க்கை சுமை இந்தளவு தூரம் மோசமடைந்திருக்காது என்பதும் பொதுமக்களின் கருத்தாகும்.
இன்றைய சூழ்நிலையில் நாட்டில் அமைதி திரும்பியிருக்கும் அதேவேளை, மக்களின் சுமைகள் எந்தவகையிலும் குறையாத போக்குகளையே காணக்கூடியதாகவுள்ளன. விலைவாசிகளின் ஏற்றம் காரணமாக கிடைக்கும் ஊதியத்தை கொண்டு எதனையும் மேற்கொள்ள முடியாதிருப்பதாக மக்கள் பெருமூச்சு விடுகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்க தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் அது தொடர்பில் கருத்து வெளியிடுவதும், விலைவாசிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.
மக்களை பொறுத்தமட்டில் மிகுந்த அரசியல் தெளிவுமிக்கவர்களாகவே காணப்படுகின்றனர். அரசியல்வாதிகள் கூறும் மாயாஜாலங்களுக்கும் போலி அறிக்கைகளுக்கும் மயங்கும் நிலைமை இன்றில்லை என்பதையே அனைத்து சம்பவங்களும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன.
இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுக்க வேண்டுமேயானால் ஊழலற்ற, உண்மையான வாக்குறுதி களை வழங்கக்கூடிய அரசியல்வாதிகளை தெரிவு செய்ய வேண்டிய பாரிய கடப்பாடு அனைத்து மக்கள் கரங்களிலும் தங்கியுள்ளன என்பதையும் மறந்துபோகக்கூடாது.
வெறுமனே மீண்டும் மீண்டும் ஊழல் பெருச்சாளிகள் அதிகார பீடங்களை அலங்கரிப்பார்களேயானால் இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பது மிகவும் கடினமான காரியமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய சூழ்நிலையில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

Geen opmerkingen:

Een reactie posten