தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 augustus 2015

ஐநா மனித உரிமை பேரவையின் அறிக்கை சர்வதேச விசாரணையை வலியுறுத்தும்!- சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவுள்ள அறிக்கை பொறுப்புக் கூறலுடன் நீதியான சர்வதேச விசாணையை வலியுறுத்தும் அதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் வலியுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என எம்.ஏ. சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும், சட்டத்தரணியுமான சுமந்திரன்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிவரவுள்ள ஐ.நாவின் அறிக்கையில் இருந்து கசிந்ததாக கூறப்படும் தகவல்கள் தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-
2009ம் ஆண்டு மே மாதம் பான் கீ மூன் கண்டியிலே வைத்து மகிந்த ராஜபக்சவோடு ஒரு கூட்டு அறிக்கை ஒன்றினை கோரியிருந்தார்.
அதேநாள் ஜெனிவாவிலே 47 நாடுகள் வாக்கெடுப்பின்றி இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தினை முறியடித்தது தொடர்பில் பாராட்டி ஒரு பிரேரணை நிறைவேற்றினார்கள்.
அக்காலப்பகுதியில் இங்கு அழுகுரல்கள் கேட்டுக் கொண்டிருந்த சமயம், தென்பகுதியில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. சர்வதேசம் அந்த கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், பாராட்டியும் இருந்தது.
அப்படியான நிலையில் இருந்து தான் தற்போது இங்கு நடைபெற்ற விடயங்களுக்கான பொறுப்புக் கூறுகின்ற விடயத்தினை ஞாபகப்படுத்தி சர்வதே விசாணை ஒன்றினை அதே சர்வதேசம் கோருகின்ற நிலை வந்துள்ளது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக என்ன செய்தது என்று கேள்வி கேட்பவர்களுக்கு இது ஒன்றே போதும் பதில் கூறுவதற்கு.
இது போன்று பல செயற்பாடுகள் இருக்கின்றது சொல்லுவதற்கு.
இந்த சர்வதேச மாற்றத்திற்கு தமிழ் மக்கள் சார்பில் அரசியல் தலைமைத்துவம் கொடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான். ஒரு சிலர் இந்த சர்வதேச மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தராவிட்டாலும் பரவாயில்லை. தொந்தரவுதான் அதிகம் கொடுத்தார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாணையை கைவிட்டு தற்போது உள்ளக விசாரணையினை கோரி நிற்கின்றது என்று சொல்கின்றார்கள். சர்வதேச விசாணை நடந்து முடிந்துவிட்டது.
அதன் அறிக்கைதான் மார்ச் மாதம் வெளிவர இருந்தது, தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் வரவுள்ளது. வெளிவரும் ஐ.நாவின் அறிக்கையில் சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான நீதி விசாரணை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சிபார்சுகள் இருக்கின்றது.
எனவே அந்த அறிக்கை வெளிவந்த பின்புதான் அதைப்பற்றி பேசலாம். அதற்கு முதல் அவ்வறிக்கையை பற்றி பேச முடியாது. வெளிவரவுள்ள அறிக்கையில் உள்ள விடயங்கள் கசிந்துள்ளது என்று கூற முடியாது. அவ்வறிக்கையின் தகவல்கள் கசிந்தது சம்பந்தமாக பலத்த சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளது. அது போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் கசிவா என்று கூட சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஐ.நாவின் உத்தியோக பூர்வ அறிக்கை வரும் வரைக்கும் அவ்வறிக்கையினைப் பற்றி நாங்கள் பேசக்கூடாது. உதிரிக் கட்சிகள் பேசலாம். நாங்கள் பேச முடியாது. ஏன் என்றால் தமிழ் மக்கள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் நாங்கள் தான்.
ஆனால் அவ்வறிக்கை வெளிவரும் போது அது முற்றுமுழுதாக சர்வதேச நீதி விசாரணையாக அது தொடர வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை.
அந்த தீர்மானத்தில் ஆரம்பத்தில் இருந்து குறிப்பாக கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் இறுதி யுத்தம்வரை நடைபெற்ற குற்றங்களுக்கான விசாரணை தண்டனைகளுக்கு அப்பால், இனப்பிரச்சினைக்கான தீர்வும் கூறப்பட வேண்டும்.
ஏனென்றால் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட்டால் மட்டும் போதாது, அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். அப்படி தீர்க்கப்பட்டால் மட்டுமே இவ்வாறான ஒரு குற்றம் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். மீள இடம்பெறாமல் இருப்பதற்கான உத்தரவாதம் தேவை.
எனவே எதிர்வரும் செம்டெம்பர் மாதம் ஐ.நாவின் அறிக்கை வருகின்ற போது விசாரணை ஒரு பக்கம் இருக்க மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் சேர்த்து வரும்;. இந்த மாற்றத்தினைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஒற்றையாட்சி என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அபிலாசைகள் இல்லை. எங்களுடைய நிலைப்படு தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். வேறு எந்த கட்சியாவது தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வு திட்டத்தினை முன்வைத்துள்ளார்களா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக இருக்கின்ற அதிருப்திகளை மக்கள் ஒரு புறத்தில் தள்ளிவைக்க வேண்டும். மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கோபம் கொண்டு எங்களுக்கு வாக்களிக்காமல் விடமுடியாது. அப்படி விட்டால் குளத்துடன் கோபித்துக் கொண்ட கதையாகத்தான் இருக்கும்.
முதலாவது மக்கள் திரளாகச் சென்று வாக்களிக்க வேண்டும். இரண்டாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
http://www.tamilwin.com/show-RUmtyITXSVms3J.html

Geen opmerkingen:

Een reactie posten