தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 februari 2017

நாங்கள் உங்களைக் கொல்லுவோம், கொல்லவில்லை என்றும் தீர்ப்போம்! எவனும் தலையிட முடியாது!

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நிறுதிட்டமாகக் கூறியுள்ளார்.
சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்று முன்பும் ஒருதடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
அவரின் இக்கருத்து இலங்கையின் ஆட்சிப் பீடத்துக்கு ஏதும் புதிதானதல்ல.
தேர்தல் காலத்தில் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் ஆட்சி பீடமேறியதும் பன்றியோடு சேர்ந்த பசுக்களாக மாறிவிடுவர்.
அந்த வழமைக்கு ஜனாதிபதி மைத்திரியும் விதிவிலக்கல்ல என்பதை அவர் இப்போது நிரூபித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்று இப்போது கூறுகின்ற ஜனாதிபதி இன்னும் ஒரு வருடம் செல்ல போர்க்குற்ற விசாரçணையே தேவையில்லை என்பார்.
ஆட்சிப் பீடத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு எதிரான கிரந்தம் தலைக்கேறிக் கொள்ளும்.
பதவிக்கால முடிபில் கிரந்தம் முற்றி பெளந்திரமாக்கும். இதுவே இந்த நாட்டு ஆட்சியாளர்களின் வழமை.
அந்த வழமைக்கு ஜனாதிபதி மைத்திரியும் விதிவிலக்கல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை.
இதுபற்றி ஐ.நா சபைக்கும் அறிவித்துள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதன் பொருள் என்ன என்று ஆராய்ந்தால்,
நாங்கள் மறுத்தால் ஐ.நா சபை எதுவும் செய்ய முடியாது என்பது ஒன்று.
மற்றையது போர்க்குற்றம் தொடர்பில் நாங்களே விசாரணை நடத்துவோம், நாங்களே தீர்ப்பு வழங்குவோம், நாங்கள் வழங்கும் தீர்ப்பை தமிழ் மக்கள் மட்டுமல்ல, ஐ.நா சபையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எங்கள் தீர்ப்பு எப்படியும் இருக்கலாம். போர்க்குற்றம் புரிந்தவர்களை ஒருபோதும் தண்டிக்கமாட்டோம் என்று முன்கூட்டியே கூறியுள்ளோம்.
அப்படியானால் எங்கள் விசாரணையும் தீர்ப்பும் எப்படியாக இருக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் அது உங்கள் அறிவின் பலவீனம் என்பதேயன்றி வேறில்லை.
இதுவே ஜனாதிபதி மைத்திரிபால கூறிய விடயத்தின் உட்பொருளாகும்.
இதனை சற்று விளக்கி பொழிப்புரைத்தால், ஏய் தமிழர்களே! நாங்கள் உங்களைச் கொல்லுவோம். உங்கள் இனத்தை வேரறுப்போம். இதில் யாரும் தலையிட முடியாது.
அவ்வாறு தலையிட்டால் நாங்கள் விசாரணை நடத்துவோம். தமிழர்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றே தீர்ப்பெழுதுவோம்.
முடிந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எங்கள் விடயத்தில் எந்தக் கொம்பனும் தலையிட முடியாது.
குறிப்பாக ஐ.நா சபைக்கு இங்கு இடமேயில்லை என்பதாக கருத்துரைக்க முடியும்.
இதை இன்னும் சற்று நுணுகிக் கூறினால்,அட! மடைத் தமிழா! நானும் மகிந்தவும் அரசியல் பதவியில்தான் எதிர், போர்க்குற்ற விசாரணையில் இருவரும் ஒன்று, இது உங்களுக்குத் தெரியாது.
உங்கட அரசியல் தலைமைக்கும் தெரியாது என்பதுதான் இதன் முழுப் பொருள் எனலாம்.

Geen opmerkingen:

Een reactie posten