தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 januari 2014

இலங்காபுரியில் கலவரம்


இலங்கையில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலம் (இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அனைத்து இனக்கலவரங்களும், மாறி மாறி ஆட்சியை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலங்களில்தான் நடந்தன என்பது உங்களுக்கு தெரியுமா?).

இலங்கை அரசுக்குச் சொந்தமான (பெயரைப் பிரசுரித்தால் சட்டரீதியாக சிக்கல் வரக்கூடிய) கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ரகசியமான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொத்தம் 8 பேர் கலந்து கொண்ட சந்திப்பு அது. 8 பேரில் 3 பேர் அன்றைய இலங்கை அரசின் அமைச்சர்கள் (மூன்று பேரும் இப்போது உயிருடன் இல்லை)

அமச்சர்களைத் தவிர்த்து விட்டால், மிகுதியுள்ள 5 பேரில் இருவர் அங்கிருந்த அமைச்சர் ஒருவரின் அமைச்சில் வேலைசெய்த செல்வாக்கான உயரதிகாரிகள். ஒருவர் கொழும்பிலும், அதன் தெற்கேயுள்ள மாத்தறை என்ற நகரிலும் அலுவலங்கள் வைத்திருந்த பில்டிங் கன்ட்ராக்டர்.

மற்றய இருவரும் சாதாரண ஆட்கள்.

சாதாரண ஆட்கள் என்றால், உங்களையும் எங்களையும் போன்றவர்கள் அல்ல. லோக்கல் ரௌடிகள்.

இரண்டு ரௌடிகளில் ஒருவரின் பெயர் கொணவாலா சுனில். மற்ற நபர், பெயர் சொல்லுமளவுக்கு பிரபலமற்ற, சுனிலின் அடியாள்.

அரசு கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்ற ரகசியச் சந்திப்பில் அவர்கள் வைத்திருந்த திட்டம் ஒன்று பற்றி அலசப்பட்டது. திட்டத்துக்கு அவர்கள் சூட்டியிருந்நத பெயர் – ஆபரேஷன் ‘பைனல் சொல்யூஷன்’.

இறுதித் தீர்வு.

தெற்கு இலங்கையிலும், தலைநகர் கொழும்புவிலும் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தி, அங்கு வசிக்கும் தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தி, அவர்களை யாழ்ப்பாணத்துக்கு ஒன்றுமில்லாமல் துரத்தவேண்டும் என்பதுதான் ஆபரேஷன் ‘பைனல் சொல்யூஷன்’ திட்டத்தின் சாராம்சம்.

முதலில், அங்கு இருந்த அமைச்சர்களில் ஒருவர், ஒரு உத்தரவாதம் கொடுத்தார். “இனக்கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்துக்காக அரசு எந்திரம் பயன்படுத்தப்படும். தமிழர்கள் இருக்கும் வீடுகளின் முகவரிகள், தமிழர்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்களின் விபரங்கள் எல்லாம் பட்டியலிட்டு தரப்படும். இதற்கு நான் பொறுப்பு” என்றார் அவர். (பின்னாட்களில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார் இவர்)

லோக்கல் ரௌடி சுனிலும் அவரது பாதாள உலக அடியாட்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்யவேண்டும் என்றும், சிறைக்கு உள்ளே அடியாட்கள் நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கலந்து கொண்ட அமைச்சர்களில் ஒருவர், மற்ற அமைச்சரிடம் “இந்த விஷயம் big man-க்கு தெரியுமா?” என்று கேட்டார்.

Big man என்று குறிப்பிடப்பட்டது, அப்போதிருந்த இலங்கையின் ஜனாதிபதியை.



ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.வை

இப்படி ஒரு ஏற்பாடு நடப்பது தெரியும். ஆனால் என்ன திட்டம் என்பது சொல்லப்படவில்லை. எப்போது செயற்படுத்தப்படும் என்பதும் சொல்லப்படவில்லை”

“கடைசி நேரத்தில் அவரால் ஏதாவது இடையூறு ஏற்படுமா?”

“எதுவும் செய்யமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை big man நமது திட்டத்துக்கு இடையூறு செய்தால், ராணுவத்தின் ஒரு பிரிவு அவருக்கு எதிராகத் திரும்பும் என்பது அவருக்குப் புரியும்”

“அதற்கான ஏற்பாடுகள்?”

“இதோ இவர்தான் அந்த ஏற்பாடுகளைக் கவனிக்கிறார்” என்று அதுவரை பேசாமல் இருந்த அமைச்சர் கைகாட்டப்பட்டார்.

இப்போது, முதல் தடவையாக வாயைத் திறந்தார் அந்த அமைச்சர். “தேவை ஏற்பட்டால், big man-ன் வீட்டை சூழ்ந்து கொண்டு அவரை அங்கிருந்து நகரமுடியாதபடி செய்துவிட ராணுவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றார் அவர். (இவரும் பின்னாட்களில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்)

“அதாவது ஹவுஸ் அரஸ்ட் (வீட்டு காவல்) போல?”

“ஆம். ‘ஜனாதிபதிக்கு பாதுகாப்பு’ என்ற பெயரில் ஆளை நகரமுடியாதபடி செய்யலாம். இது, அவசியம் ஏற்பட்டால்தான். எமது திட்டத்தில் big man இடையூறு எதுவும் செய்யாமல் இருந்தால், ஹவுஸ் அரஸ்ட் தேவையே இல்லை.”

“அதாவது இது பேக்கப் பிளான்?”

“ஆம்”

‘ஆபரேஷன் இறுதித் தீர்வு’ இனக் கலவரம் ஏற்படுத்தும் திட்டத்தின் ஏற்பாடுகள் பற்றி டிஸ்கஸ் பண்ணப்பட்டதுடன், அன்றைய ரகசிய சந்திப்பு முடிந்தது.

அன்றைய இரவின்போது, அவர்களது திட்டத்தில் முடிவு செய்யப்படாமல் இருந்த முக்கிய விஷயம்-

கொழும்புவில் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் தொடங்கப்போகும் தேதி.

அரசு கெஸ்ட் ஹவுஸில் ரகசியமாகச் சந்தித்து கொண்ட எட்டு பேரும் கலைந்து, வெவ்வேறு திசையில் போய்விட்டார்கள். அந்த எட்டு பேரில் ஒருவரை மாத்திரம் பின்தொடரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம். அப்போதுதான் அவர் என்ன செய்தார் என்று தெரியும்.

நாம் பின்தொடரப் போகும் நபர் ஒரு அரசு உயரதிகாரி. இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொல்ல வேண்டுமா? சொல்கிறோம்.

நிலம், நில மேம்பாடு மற்றும் மஙாவலி மேம்பாடு அமைச்சில் (Land, Land development & Mahaweli development ministry) பணிபுரிந்த அதிகாரி அவர். (மஹாவலி என்பது, இலங்கையின் பெரிய ஆறு) அந்த அமைச்சில், அமைச்சரின் செயலாளருக்கு அடுத்த கிரேட் பதவியில் இருந்தவர். ஐ.தே.கட்சியின் அனுதாபியாக தன்னைக் காட்டிக்கொண்டவர் (இப்பொது ஓய்வு பெற்றுவிட்டார்).

கெஸ்ட் ஹவுஸில் இருந்து கிளம்பிய அவர், நேரே தனது வீட்டுக்குப் போகவில்லை.

அந்த நாட்களில் அவர் ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தார். அதில் ஏறி கொழும்பு, கொள்ளுபிட்டிய என்ற இடத்தில் இருந்த உணவு விடுதி ஒன்றுக்குச் சென்றார்.

இந்த உணவு விடுதி, இந்தியர் ஒருவருக்குச் சொந்தமானது.

பெரும்பாலான கொழும்புவாசிகளுக்கு அது கொழும்பு சராசரியைவிட விலை அதிகமான, வட இந்திய உணவுகளுக்கு பிரபலமான உணவகம் என்று தெரியும். அவர்களில் பலருக்கு தெரியாத விஷயமும் ஒன்று இருந்தது. அது என்னவென்றால், அந்த வட இந்திய உணவகம்தான்-

இந்திய உளவுத்துறை ‘ரா’வின் கொழும்பு மீட்டிங் பாயின்ட்!

அந்த நாட்களில் (1980களின் ஆரம்பத்தில்) அந்த உணவகத்தில் அடிக்கடி காணப்படும் ஒரு நபர் திலக். இவரது முழுப்பெயர் என்னவென்று தெரியாது. உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருடனும் பரிச்சயமானவர். எல்லோரும் அவரை ‘திலக்ஜீ’ என்று அழைப்பார்கள். அவர் வட இந்தியர் என்று சொல்வார்கள். ஆனால் அட்டகாசமாக கோவை பக்கத்து தமிழ் பேசுவார்.

இந்த ‘திலக்ஜீ’ தெரிந்த முகமாக உள்ளதே… இவரை நாம் வேறு எங்கோ பார்த்திருக்கிறோம் அல்லவா? ஆம். பகல் நேரங்களில் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில், சபாரியுடன் தென்படும் அதே திலக்தான் இவர்.

திலக் ஒரு ‘ரா’ அதிகாரி.

அரசு கெஸ்ட் ஹவுஸில் இருந்து வந்த உயரதிகாரி இந்த வட இந்திய உணவகத்துக்கு வந்து திலக்கை சந்தித்தார்.

இருவரும் உணவு அருந்தியபடி பேசிக்கொண்டார்கள். அப்போது திலக்குக்கு ‘ஆபரேஷன் இறுதித் தீர்வு’ திட்டம் பற்றி, தெரிவிக்கப்பட்டது.

திட்டத்தை முழுமையாக கேட்ட திலக், “சீரியசாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட போகிறதா? அல்லது சும்மா ஒரு திட்டம்தானா இது?” என்று கேட்டார்.

“அது தெரியாது. ஆனால் அமைச்சர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.”

“இருந்தாலும் ஒரு அரசு, இப்படியான இனக்கலவரம் ஒன்றை திட்டமிட்டு நடத்தும் என்று நான் நம்பவில்லை. இவர்கள் சும்மா பேசிக்கொள்வார்கள். எதுவும் நடக்காது. எனிவே, உங்கள் தகவலுக்கு நன்றி” என்றார் திலக்.

அன்றிரவு திலக் இப்படி தமது அவநம்பிக்கையை காட்டிக் கொண்டாரே தவிர, கிடைத்த தகவலை அலட்சியமாக விட்டுவிடவில்லை.

இதை எப்படிச் சொல்கிறோம் என்றால், மறுநாள் மதியம் கொழும்புவில் இருந்து சென்னை சென்ற இந்தியன் ஏர்லைன்ஸின் IC574 இலக்க விமானத்தில் திலக் பயணம் செய்தார். சென்னையை அடைந்த அவர், உடனே மற்றொரு இந்தியன் ஏர்லைன்ஸின் விமானம் மூலம் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றார்.

கிடைத்த தகவலின் முக்கியத்துவம் கருதி, கொழும்புவின் அப்போது பணியில் இருந்த ‘ரா’ அதிகாரி திலக்ஜீ, தாமே நேரடியாக தகவலை ‘ரா’வின் டில்லி தலைமையகத்தில் போய் சொல்வதற்காகவே மறுநாளே புறப்பட்டு சென்றிருந்தார்.

1968-ம் ஆண்டு செப்டெம்பர் 21-ம் தேதி வெறும் 250 பேருடன் தொடங்கப்பட்டது இந்திய உளவுத்துறை ‘ரா’. இந்திய உளவுத்துறை ஜீனியஸ் அல்லது ஸ்பை மாஸ்டர் என இன்றும் போற்றப்படும் ராமேஷ்வர் நாத் காவ் தலைமையில் சிறியதாக தொடங்கப்பட்ட ‘ரா’, 80களில் பெரிதாக வளர்ந்து விட்டிருந்தது. 1980களில் இருந்தபோது, அதுவரை ‘ரா’ செய்திருந்த வெற்றிகரமான ஆபரேஷன் என்றால், 1974-ல் செய்யப்பட்ட ‘ஆபரேஷன் சிரிக்கும் புத்தர்’ (Operation Smiling Buddha) என்பதை சொல்லலாம். (1980களில் ‘ரா’ உளவுத்துறைக்கு ஏற்பட்ட மகா பின்னடைவு என்றால், கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘கனிஷ்கா’ விமானத்துக்கு குண்டு வைக்கப்பட்டு, அயர்லாந்து அருகே வெடித்து சிதறியதை குறிப்பிடலாம்)

டில்லியில் இருந்த ‘ரா’ தலைமையகத்தில் இருந்தவர்களுக்கு, கொழும்புவில் இருந்து திலக்ஜீ கொண்டுவந்தபோது, அந்த தகவலை அடுத்து அடுத்த பல வருடங்களுக்கு தாம் புதிய ஆபரேஷன் ஒன்றில் ஈடுபட போகிறோம் என்று தெரிந்திருக்காது.

திலக்ஜீ, கொழும்புவில் தமக்கு கிடைத்த தகவலை, ‘ரா’ அமைப்பின் இலங்கை விவகாரங்களுக்கு திலக்ஜீயின் மேலதிகாரியாக இருந்தவர் கேரளாவை சேர்ந்த சிவசங்கரன் நாயர். (ராவின் கே.சங்கரன் நாயர் அல்ல இவர். சங்கரன் நாயர், ராமேஷ்வர் நாத் காவ்வுக்கு பின் 1977-ல் ரா அமைப்புக்கு தலைவரானவர்.)

திலக்ஜீ கொழும்புவில் இருந்து கொண்டுவந்த இந்த தகவலில் பெரிய ‘லீட்’ இருப்பதை முதலில் உணர்ந்து கொண்டவர், இந்த சிவசங்கரன்தான். அவர்தான் இந்த விவகாரத்தை தமது இலாகா டைரக்டர் மூலமாக இந்திய பிரதமர் வரை கொண்டு சென்றார். அப்போது இந்திய பிரதமர், மறைந்த திருமதி இந்திரா காந்தி.

இந்த வகையில், இலங்கையில் இனக்கலவரம் ஒன்று உருவாகுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது என்ற விஷயம் இந்திய உளவுத்துறை ‘ரா’வுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.

அதை அவர்களால் தடுக்க முடிந்திராது என்பது வேறு விஷயம். ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சு சில கடுமையான நடவடிக்கைகளை இலங்கை இனக்கலவரம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் எடுத்திருந்தது என்பது பலருக்குத் தெரியாது.

அது நடைபெற்றது டில்லியில்.



அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு ‘ரா’வின் மூலம் இலங்கையில் இனக்கலவரத்துக்கான ஆயத்த வேலைகள் 1983-ம் ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் தெரிய வந்தது. (கொழும்புவில் இனக்கலவரம் ஜூலை 24-ம் தேதி ஆரம்பமாகியது) இந்திரா காந்தி உடனடியாக சங்கர் பாஜ்பாயை (வாஜ்பாய் அல்ல, இவர் பாஜ்பாய்.. K. Shankar Bajpai) அழைத்து அதுபற்றி விவாதித்தார். சங்கர் பாஜ்பாய், அப்போது இந்திய அரசின் கூடுதல் வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு) என்ற பதவியில் இருந்தார் (பின்னாட்களில் இந்த சங்கர் பாஜ்பாய், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்)

அதைத் தொடர்ந்து சங்கர் பாஜ்பாயின் அலவலகத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது.

அழைப்பு சென்ற இடம் டில்ல சாணக்யபுரியில் இருந்த இலங்கைத் தூதரகம்.

அப்போது டில்லியில் இலங்கை தூதராக இருந்தவர் பர்னாட் திலகரட்னே. அவரை அவசர அலுவல் ஒன்றுக்காக தனது அலுவலகத்துக்கு வந்து சந்திக்கும்படி தகவல் கொடுத்தார் சங்கர் பாஜ்பாய்.

அன்று மாலையே இருவரது சந்திப்பும் நடைபெற்றது.

“மிஸ்டர் திலகரட்னே, இலங்கையில் நடைபெறும் சில விஷயங்கள் பற்றி இந்திய அரசு மிகவும் கவலையடைந்திருக்கிறது. சில விஷயங்கள் எங்களால் ஏற்று கொள்ள முடியாமல் இருக்கின்றது. அது சம்மந்தமாக எங்கள் கருத்தை அதிகாரபூர்வமாக உங்களிடம் தெரிவித்து பதிவு செய்துகொள்ள இந்திய அரசு விரும்புகிறது” என்றார் பாஜ்பாய்.

“சொல்லுங்கள் மிஸ்டர் பாஜ்பாய்.”

பாஜ்பாயின் கையில் இருந்த பைலில், செய்தித்தாள் ஒன்றிலிருந்து வெட்டப்பட்ட காகிதம் ஒன்று இருந்தது. அதை எடுத்து இலங்கைத் தூதரிடம் கொடுத்தார். அந்தக் காகிதம் லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் பத்திரிகையின் ஜூலை 12-ம் தேதி பதிப்பில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.

இயன் வார்ட் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளருக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே கொடுத்திருந்த பேட்டி அது.

இலங்கையில் அப்போது அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றியும், தமிழ் மக்கள் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனே அந்தப் பேட்டியில் காரசாரமான பதில் ஒன்றைக் கூறியிருந்தார்.

அவர் கூறிய பதில்: “தமிழர் விடுதலைக் கூட்டணி பயங்கரவாதிகளுக்காக பரிந்து பேசுகின்றது. அவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும்வரை அரசியல் ரீதியான பேச்சுக்களுக்கு நாங்கள் அவர்களை அணுகுவோம். ஆனால் பயங்கரவாதம் சம்மந்தமான விஷயங்களை நாங்கள் எமது ராணுவத்தை கொண்டு நேரடியாகவே தீர்த்துக் கொள்ளப் போகின்றோம். பயங்கரவாதிகளை எப்படி ஒடுக்குவது என்பது அரசுக்கு தெரியும்.”

அது ஒரு பதில். அதே பேட்டியில் அவர் கூறியிருந்த மற்றுமோர் பதில்: “நாங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்களைப் பற்றி இப்போது கவலைப்படத் தயாராக இல்லை. அவர்களைப் பற்றியோ, அவர்களது உயிர்களைப் பற்றியோ நாங்கள் (இலங்கை அரசு) கவலைப்படப் போவதில்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படப் போவதில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பயங்கரவாதிகள் அனைவரும் துடைத்தெறியப்படும் வரை இதுதான் அரசின் நிலைப்பாடாக தொடரும்.”

இந்த பதில்களை இலங்கை தூதர் பர்னாட் திலகரட்னே படித்து முடிக்கும்வரை காத்திருந்த பாஜ்பாய், அதன்பின் பேசத் தொடங்கினார். “இலங்கையிலுள்ள தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் தலைமுறை தலைமுறையான உறவுமுறை இருக்கிறது. உங்கள் ஜனாதிபதி, தமிழர்களை பற்றி இப்படியான கருத்து ஒன்றை கூறியிருப்பது இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.” என்றார் பாஜ்பாய்.

இலங்கைத் தூதுவர் எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.

பாஜ்பாயின் பைலில் இருந்த அடுத்த காகிதம் வெளியே வந்தது.

அது ஜூலை மாதம் 19-ம் தேதி இலங்கை ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால உத்தரவு ஒன்றின் நகல்.

அந்த உத்தரவின்படி இலங்கையில் பத்திரிகை தணிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பத்திரிகையாளர்கள் இலங்கைக்குள் சுதந்திரமாக எங்கும் சென்று செய்தி திரட்டுவது தடைசெய்பட்டிருந்தது.

இதைப் பெற்றுக் கொண்டபோதும் திலகரட்ன எதுவும் பேசவில்லை.

பாஜ்பாயின் கையிலிருந்த பைலில் மற்றுமோர் காகிதமும் இருந்தது. அதுவும் வெளியே வந்தது.

அதிலிருந்தும் ஜே.ஆரினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால உத்தரவு ஒன்றுதான்.

அந்த உத்தரவின்படி இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்படும் சந்தேக நபர்களை ராணுவம் உடனடியாக எரித்துவிடமுடியும். போஸ்ட்மார்ட்டம், விசாரணை என்று எந்தவித நடைமுறைகளும் தேவையில்லை.

“ராணுவத்துக்கு யாராவது ஒருவர் மிது சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் சுட்டுக் கொன்றுவிடலாம். உடலை உடனடியாக எரித்தும் விடலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. அதுதானே இந்த உத்தரவின் மூலம் உங்கள் ஜனாதிபதி ராணுவத்துக்கு கொடுத்திருக்கும் அதிகாரம்?” என்று திலகரட்னேவை நேரடியாகப பார்த்தபடி கேட்டார் பாஜ்பாய்.

“ஆமாம். ஆனால், அது எதற்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.”

“எதற்காக?”

“பங்கரவாதிகளை பூண்டோடு அழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. அப்போது பயங்கரவாதிகள் கொல்லப்படுவது சகஜம். போஸ்ட்மோட்டம், விசாரணை என்று வழமையான நடைமுறைகளை செய்யக் கிளம்பினால் அது பெரிய காலதாமதத்தை ஏற்படுத்தும். அதற்காகத்தான் இந்தச் சட்டம்.”

“சாலதாமதம் ஏற்படும் என்ற காரணத்தால் தமிழர்களைக் கொல்ல சட்டம் வகுக்கப்பட்டதையும், தமிழர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று உங்களது ஜனாதிபதி கூறியிருப்பதையும் இந்தியா சும்மா பார்த்துக்கொண்டு இருக்கும் என உங்கள் ஜனாதிபதி நினைக்கிறாரா?”

“மை கார்ட் மிஸ்டர் பாஜ்பாய். இது ஒரு அப்பட்டமான தலையீடு இல்லையா? மற்றொரு சுதந்திர நாட்டின் விவகாரத்தில் இந்தியா அத்துமீறி தலையை நுழைக்கும் செயல் இல்லையா?”

“இல்லை என்று நினைக்கிறோம் – பிரச்சனை தமிழருடன் சம்மந்தப்பட்டது என்பதால்”

“மிஸ்டர் பாஜ்பாய். ஒரு விஷயம் தெரிய வேண்டும். நீங்கள் கூறுவது தமிழ்நாடு அரசின் கருத்தா? அல்லது மத்திய அரசின் கருத்தா?”

“இது இந்தியாவின் கருத்து. அதுவும் இந்திய அரசின் அதியுச்ச அதிகாரத்தில் இருப்பவரின் (இந்திராகாந்தி) கருத்து. நீங்கள் இலேசில் ஒதுக்கிவிட முடியாதவரின் கருத்து.”

இப்போது இலங்கைத் தூதுவரின் குரல் உயர்ந்தது. “நீங்கள் கூறும் அதியுச்ச அதிகாரத்தில் இருப்பவர் இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தை கொண்டுவந்தார். அப்போது நாங்கள் (இலங்கை அரசு) ஏதாவது சொன்னோமா? உங்கள் நாட்டின் சொந்த விவகாரம் அது என்று தலையிடாமல் விட்டுவிட்டோம். உங்களிடம் இருந்தும் அதே மாதிரியான அணுகுமுறையைதான் எங்கள் அரசும் எதிர்பார்க்கிறது. இது எங்கள் பிரச்சனை. எங்கள் வழியில் தீர்த்துக் கொள்கிறோம்.”

இதைக் கூறும்போது பொர்னாட் திலகரட்ன கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருந்தார். அவரது விரல்கள் நடுங்கின.

ஆனால், பாஜ்பாய் நிதானமாக பதில் சொன்னார். அவருடைய குரல் ஆழமாகவும், இறுக்கமாகவும் உறுதியாகவும் இருந்தது.

“மிஸ்டர் திலகரட்னே..”

“யெஸ்”

“நாங்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், பலமுறை சந்தித்திருக்கிறோம்”

“ஆம்”

“முன்பு எப்போதும் இல்லாமல் உங்களுடன் கடுமையாக பேசவேண்டிய சூழ்நலை, எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.”

“…………” மௌனம்.

“நீங்கள் இந்திய அரசை சேலஞ்ச் பண்ணாதீர்கள். அது உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் நல்லதல்ல. இந்தியாவில் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் வேறு. நீங்கள் கொண்டுவந்திருப்பது வேறு. நீங்கள் கொண்டுவந்திருக்கும் சட்டத்தில் குறிவைக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள். இந்தியர்களுடன் ரத்த சம்மந்தம் உள்ளவர்கள்”

“ஆனால்…”

“நான் சொல்வதை முழுமையாக கேளுங்கள். தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் ஒன்றை உங்கள் அரசாங்கம் ஏற்படுத்த திட்டமிடுகின்றது என்ற தகவல் எங்களிடம் இருக்கிறது”

“என்னது இனக் கலவரமா? திட்டமா? யார் சொன்னது?”

“நீங்கள் இந்த அலுவலகத்தில் இருந்து போன பின்னர், தொலைபேசியில் அழைத்து உங்கள் அரசைக் கேளுங்கள்”

“இனக்கலவரம் ஏற்படுவது இலங்கையில் சாத்தியமில்லை. நிச்சயமாக இல்லவே இல்லை. அதுவும், டிமது அரசே இனக்கலவரம் ஒன்றுக்காக திட்டம் வகுக்கிறது என்று நீங்கள் சொல்வது, மிக மட்டமான கற்பனை”

“அதுதான் சொல்லி விட்டேன… இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவது பற்றிய திட்டம் இருக்கிறதா என்பதை உடனே போன் செய்து உங்கள் அரசையே கேளுங்கள். உங்கள் அமைச்சர்களை கேளுங்கள். இந்தியர்கள் முட்டாள்கள் அல்ல. எங்களுக்கு இலங்கை முழுவதிலும் கண்களும் காதுகளும் இருக்கின்றன. எங்களுக்கு அங்கே நடப்பவை எல்லாமே தெரியும்”

“என்னுடைய கருத்து ஒன்றே ஒன்றுதான். நீங்கள் (இந்தியா) அத்துமீறி எங்கள் நாட்டு விவகாரத்துக்குள் தலையிடுகிறீர்கள்”

“தமிழர்கள் மீதான இனக்கலவரம் ஒன்று இப்போது நடைபெற்றால், இதைவிட அதிகமாகத் தலையிடுவோம். எங்கள் கடமை அது.”

“இனக் கலவரம் என்ற கதை பொய்யாகப் போனால்?”

“மிஸ்டர் திலகரட்னே… இனக்கலவரம் என்ற கதை பொய்யாக போனால், தனிப்பட்ட முறையில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வேன். அது நிச்சயம். ஆனால் அதைவிட நிச்சயமாக மற்றொரு விஷயத்தை கூறுகிறேன். ஒருவேளை அடுத்த சில தினங்களில் இனக் கலவரம் ஒன்று ஏற்படுவது நிஜமாக இருந்து விட்டால், பின்விளைவுகள் மிக மிக மோசமாக இருக்கும்” என்றார் சங்கர் பாஜ்பாய்.

பாஜ்பாய் இப்படி கடுமையான வார்த்தைகளை உதிர்த்து 48 மணி நேரத்தில், கொழும்புவில் ஆரம்பித்தது தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம்

Geen opmerkingen:

Een reactie posten