[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 05:28.41 AM GMT ]
யாழ். வடமராட்சி பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடமராட்சி முள்ளி பகுதியில் தேங்காய் பொச்சுமட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் புல் வெட்டிக் கொண்டிருந்த இராணுவத்தினர் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே எரியூட்டப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எலும்புக்கூட்டுடன் பெண்கள் அணியும் ஆடைகளின் பாகங்களும் மீட்கப்பட்டன. நீதவானின் உத்தரவுக்கமைய பரிசோதனைக்காக எலும்புக்கூடு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalx0.html
சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள சிறந்த சந்தர்ப்பம்!- ராதிகா குமாரசுவாமி
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 05:34.20 AM GMT ]
நாட்டில் சிறுபான்மையினராக வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சிறுபான்மையின கட்சிகள் தமக்குள்ளான குரோத மனப்பாங்கினை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
ஜனாதிபதிக்கான முன்னுரிமைகளும் சிவில் சமூகத்தின் முன்னோக்கும் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் அமைந்துள்ள இன ஆய்வுக்கான சர்வதேச மையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல்களால் அரசியல்வாதிகள் பேரம் பேசப்படும் சக்திகளாக மாறியுள்ளனர்.
இலங்கையை பொறுத்தவரை அரசியல் மாற்றம் ஒன்று நிலவ வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கில் வாழும் மக்கள் இன்னும் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.
இன்று அம் மக்களின் காணி சுவீகரிப்பு பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. அதற்காக தீர்வினை பெற்றுக்கொடுக்க அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அதே போல் அண்மைய காலங்களாக சிறுபான்மையின மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிட்ட இன அடக்குமுறைகளை கட்டுப்படுத்த இவ் அரசு முன்வராமை சிறுபான்மையினர் மத்தியில் அரசாங்கத்தின் விரக்தி நிலையை மேலும் அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலையில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தூர நோக்கு சிந்தனையுடன் சரியான முடிவினை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இலங்கையை பொறுத்த வரை இங்கு பெரும்பான்மையினராக சிங்கள மக்களே வாழ்கின்றனர். எனவே சிறுபான்மையினராக வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள பெரும்பான்மை இன மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாத்திரமே அது யதார்த்தமானதாகும்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்நிலையை உணர்ந்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வர வேண்டும்.
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் அங்குள்ள மக்களை இஸ்ரேல் பாலஸ்தீனத்தை பார்ப்பதை போல் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிலை மாற்றப்பட வேண்டும். அந்நிலையை மாற்ற அரசியல் மாற்றம் ஒன்று அவசியம்.
இம்முறை ஜனாதிபதி தேர்தல் பலராலும் பரவலாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.
எதிரணிகள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நியமித்துள்ளமை அரச தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினரின் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களின் வாக்குகள் பொது வேட்பாளருக்கு கிடைக்க கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக கிராமப்புறங்களில் உள்ளவர்களின் வாக்குகளே உள்ளன.
பொது வேட்பாளரின் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை அகற்றும் வேலைத்திட்டத்தை நான் வரவேற்கின்றேன்.
அதேபோல் அவர் வெற்றியடையும் பட்சத்தில் இரண்டு வருடகாலத்துக்கு பொது வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக தனது செயற்பாடுகளை முன்னெடுப்பாராயின் அது ஸ்திரமான அரசியலமைப்பினை மீள் உருவாக்குவதற்கு அவருக்கு பெரும் துணையாக இருக்கும் என நான் நம்புகின்றேன் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalx1.html
Geen opmerkingen:
Een reactie posten