உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கை இரகசியமாக நடத்தப்பட்டமை வருத்தமளிக்கிறது!– சட்டத்தரணிகள்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 12:51.55 AM GMT ]
சட்ட விளக்கம் கோரல் தொடர்பில் கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அஜித் பத்திரண தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துதல் ஆகிய இரண்டு காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோரியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த சட்ட விளக்க கோரிக்கை தேசிய ரீதியில் முக்கியத்துவமானது.
தனிப்பட்ட ரீதியில் இந்த விளக்கத்தை அளிப்பது நியாயமானதல்ல.
பகிரங்கமான முறையில் இது தொடர்பில் வாதப் பிரதிவாதங்களைச் செய்ய அனுமதிக்குமாறும், விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது.
சட்ட விளக்கம் கோரிய நீதியரசர்களே இது தொடர்பில் எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணை செய்ய உள்ளனர்.
இது நியாயமற்ற ஓர் செயற்பாடாகும். ஏனெனில், ஏற்கனவே ஓர் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய நீதியரசர்களிடம் மாறுபட்ட ஓர் விடயம் பற்றி வாதமொன்றை முன்வைத்து நியாயம் பெற்றுக்கொள்வது எந்தளவிற்கு நடைமுறைச் சாத்தியமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பகிரங்கமாக வாதம் நடத்தி அதன் பின்னர் சட்ட விளக்கம் அளித்திருக்க வேண்டுமென என அஜித் பத்திரண தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYno0.html
மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் கோரிக்கையை பரிசீலிக்கத் தயார்!- பசிலின் அழைப்புக்கு சம்பந்தன் பதில்!
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 01:25.12 AM GMT ]
தங்களை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும், இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்தார் என்று கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
நாங்கள் இதுவரை அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட முன்வரவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது தவறானது.
எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருந்தே வந்துள்ளோம்.
எமது மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும், மீள்குடியேற்றம் பற்றியும் தத்தமது பகுதிகளுக்கு எமது மக்கள் திரும்புவது குறித்தும் இராணுவமயப்படுத்தலைத் தவிர்ப்பது பற்றியெல்லாம் எப்போதுமே அரசுடன் பேசி ஒத்துழைத்து இணக்கத் தீர்வு காண நாம் தயாராகவே இருந்து வந்துள்ளோம்.
இவற்றுக்கு மேல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அமைதித் தீர்வு காணுதல் போன்றவை தொடர்பிலும் அரசுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காட்டிச் செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருந்து வந்துள்ளோம்.
அதற்கான எமது தற்றுணிபை, பற்றுறுதியை, திடசங்கற்பத்தை நாம் வெளிப்படுத்தியே வந்தோம்.
அதற்காக இந்த அரசுடன் நீண்டகாலமாக பல சுற்றுக்கள் பேச்சுக்களையும் நடத்தினோம்.
ஆனால் அரசுதான் ஒரு தலைப்பட்சமாக அந்தப் பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்டது.
எனவே இந்த அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது.
இப்போது ஜனாதிபதித் தேர்தலில் எமது ஒத்துழைப்பைக் கோருவது பற்றிய தகவலை ஊடகங்கள் மூலமாகவே நாம் அறிகிறோம்.
உத்தியோகபூர்வமாக அத்தகைய அழைப்பு ஏதும் எமக்கு விடுக்கப்படவில்லை.
எனினும் அப்படி ஓர் அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஒரேயடியாக நிராகரித்து விடமாட்டோம்.
முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். அதன் பின்னர் இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஆழமாக பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்.
நடுநிலை மனதுடன் அத்தகைய கோரிக்கையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து நாம் ஒரு தீர்க்கமாக முடிவை எடுப்போம் என்றார் இரா.சம்பந்தன் எம்.பி.
தொடர்புடைய செய்தி - தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க வேண்டும்!- பசில் ராஜபக்ச அழைப்பு
http://www.tamilwin.com/show-RUmszBSVKYno2.html
வன்னி விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்: சிவசக்தி ஆனந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 01:51.34 AM GMT ]
வறட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
போர் காரணமாக இந்த மக்கள் நீண்ட காலமாக சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள அரசாங்கம் எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சலுகை விலை அடிப்படையில் எரிபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இராணுவத்தினர் விவசாய நிலங்களை பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.
இந்தக் காணிகளை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYno3.html
Geen opmerkingen:
Een reactie posten