மாவீரர் வாரம் நெருங்கும் நிலையில் யாழ்.பல்கலைக் கழகத்தின் பீடங்கள் அனைத்தும் விடுமுறைகளினை அறிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விஞ்ஞான பீடம், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் என்பன ஏற்கெனவே பரீட்சை மற்றும் தொழிற்றுறை பயிற்சி, சுற்றுலா விடுமுறைகளை அறிவித்துள்ள நிலையில் கலைப்பீடமும் எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறையாக அறவிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று மாவீரர்தினம் என்பதால் மாணவர்கள் மாவீரர் தின த்தை அனுஷ்டித்து விடக்கூடும் என்பதனாலேயே இவ்வாறு விடுமுறைகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்படுவதாக தெரிய வருகின்றது.
கடந்த சில வாரங்களாக யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்து காணப்படுகின்ற அதேவேளை பல்கலைக்கழகத்துக்குள் என்ன நடைபெறுகின்றது என்பதையும் கண்காணித்து வருகின்றனர் என மாணவர் தரப்பினர் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இராணுவத்தின் பிரசன்னத்தால் மாணவர் மத்தியிலும் விரிவுரையாளர்கள் மத்தியிலும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் பல்கலை ஆசிரியர் சங்கம் ஏற்கெனவே கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதேவேளை பரீட்சை விடுமுறை மற்றும் தொழில்துறை சுற்றுலா பயிற்சிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவதனால் விடுதிகளிலும் மாணவர்கள் தங்கமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பரீட்சை விடுமுறை மற்றும் சில காரணங்கள் கூறப்பட்டு இவ்வருடமும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை இவ்விடுமுறையினை அந்தந்த பீடங்களே அறிவித்துள்ளன எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தினம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv4.html
Geen opmerkingen:
Een reactie posten