maandag 17 november 2014

புலிகளுடனான சமாதான முயற்சிகளுக்கு மஹிந்த பூரண ஆதரவை வழங்கினார்!- குற்றச்சாட்டுக்கு சொல்ஹெய்ம் பதில்!

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் பீரிஸ் முறைப்பாடு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:54.22 PM GMT ]
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், விசாரணை திகதி நீடிக்கப்பட்டமையை தொடர்ந்தும் கண்டித்து வருகிறது.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுவரும் நியாயமற்ற விசாரணை நடவடிக்கையை கண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கண்டனத்தை இன்று ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நண்டியை சந்தித்து போது வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்காக ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்குழு, ஒக்டோபர் 30 என்ற காலவரைறையை குறிப்பிட்டிருந்தது.
எனினும் பின்னர் காலவரைறைக்கு பின்னர் கிடைக்கும் சாட்சியங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்தக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சாட்சியங்கள் கிடைக்கப் பெறும் மின்னஞ்சல் முகவரியையும் விசாரணைக் குழு ஒக்டோபர் 30வுடன் மூடவில்லை.
இது நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறையாகும்.
இதேவேளை விசாரணைகள் இடம்பெற்ற காலப் பகுதியில் சில உள்நாட்டு வெளிநாட்டு தரப்புக்கள் வெற்றுக் கடதாசிகளில் பொய்யான கையொப்பங்களுடன் சாட்சியங்களை சமர்ப்பிக்க முயற்சித்தன.
இதன்கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
எனவே குறித்த நியாயமற்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பீரிஷ், நண்டியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjr6.html
புலிகளுடனான சமாதான முயற்சிகளுக்கு மஹிந்த பூரண ஆதரவை வழங்கினார்!- குற்றச்சாட்டுக்கு சொல்ஹெய்ம் பதில்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 02:08.01 PM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த 15ம் திகதியன்று குருநாகலில் வைத்து வெளியிட்ட ஆச்சரியத்தக்க தகவல்கள் தொடர்பில் நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் பதில் வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் இந்த வார்த்தை தாக்குதலை, தற்போதைய நிலையில் பெரிதாக எடுக்கமுடியாது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நோக்காகக் கொண்டே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்ச உட்பட்ட அனைவருக்கு தெரிந்த விடயங்களை தாம் வெளிப்படுத்துவதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமாதான நிலைப்பாட்டுக்காக நோர்வே, ஏற்பாட்டாளராக செயற்பட்டது.
இதன் போது அந்தநாடு சமாதான முனைப்பை கருத்திற்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவிகளை செய்தது. எனினும் இராணுவ நடவடிக்கைகளுக்காக நிதியுதவிகளை வழங்கவில்லை.
சுமாதான முயற்சிகளில் விடுதலைப் புலிகளை கொண்டு வரவேண்டும் என்பதற்காக நோர்வே,  விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்துக்கு பொருளாதார வளங்களை வழங்கியது.
இதில் வானொலி உபகரணங்களும் அடங்கும்.
இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் அனைத்து தலைவர்களுக்கும் தெரிந்த நிலையிலேயே வழங்கப்பட்டன.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்திலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இவை அனைத்தும் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன.
மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் பல தடவைகள், அவரை சந்தித்து சமாதான முயற்சிகள் தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது அமைச்சர் பின்னர், பிரதம மந்திரி என்ற அடிப்படையில் அவர் தமது முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்கினார் என்று சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மஹிந்த ராஜபக்ச தமது முழு ஒத்துழைப்பையும் நோர்வேயின் முயற்சிகளுக்கு வழங்கியதாகவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் 2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ச, நோர்வே தமது சமாதான பணிகளை மேற்கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
அத்துடன் தனிப்பட்ட ரீதியிலும் தம்மை அழைத்தார்.
இதனையடுத்து பல தடவைகளாக மஹிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அரசியல் கோரிக்கைகளை தம்மூலமாக அனுப்பினார். அத்தனை கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துக்கு ஒழுங்குற கொண்டு போய் சேர்க்கப்பட்டன.
இதன்போது மஹிந்த ராஜபக்ச, தம்மை தனிப்பட்ட ரீதியிலும் நோர்வே அரசாங்கத்தையும் பாராட்டினார்.
இந்தநிலையில் 2010ஆம் ஆண்டும் மஹிந்த ராஜபக்ச, நோர்வேயின் சமாதான முயற்சிகளை ஏற்றுக்கொண்டதுடன் இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இதற்கு மேலதிகமான விபரங்கள் யாவும், விளக்கமாக 2015ம் ஆண்டு வெளியாகப்போகும் தாமும் நோர்வேயின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்கீசனும் மேற்கொண்ட சமதாதான முயற்சிகள் தொடர்பாக பிரித்தானிய செய்தியாளர் மற்றும் ஆசிரியர் மார்க் செல்டர் எழுதி வெளியிடவுள்ள நூலில் உள்ளடங்கியுள்ளதாக எரிக் சொல்;ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள எரிக் சொல்ஹெய்ம், தம்மை பொறுத்தவரையில், உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்றில்லாமல், அனைவருமே தமக்கு தெரிந்த விடயங்களை உண்மையாக அந்த விசாரணைக்குழுவிடம் வெளியிடவேண்டும் என்று எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்து விடயங்களும் கூறப்பட வேண்டும் என்று நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியாக முக்கியமான திட்டங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் செயலாளருக்கும் அந்த அமைப்பின் நிறுவனங்களுக்கும் உதவ வேண்டியது அனைவரும் கடமை என்று தாம் நம்புவதாகவும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjr7.html

Geen opmerkingen:

Een reactie posten