வடமாகாணசபைத் தேர்தலை நிறுத்தக் கோரும் மனுவை சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
1987இல் ராஜீவ்காந்தியை துப்பாக்கிப் பிடியால் தாக்கிக் கொலை செய்ய முயன்ற விஜித றோகண விஜயமுனியை தேசிய அமைப்பாளராகக் கொண்ட சிங்கள ஜாதிக பெரமுன என்ற அமைப்பே இந்த மனுவை சமர்ப்பித்திருந்தது.
இந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு அமைய வடக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடக்கவுள்ளதால், நாட்டின் அரசியமைப்பின்படி, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அரச சட்டவாளர்கள் வாதிட்டனர்.
இந்தநிலையில், மனுவில் குறிப்பிட்டுள்ளது போன்று, சிங்கள ஜாதிக பெரமுன என்ற அரசியல் கட்சியை தேர்தல் ஆணையாளர் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிறிஸ்கந்தராஜா சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்றும் அவர் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பையடுத்துக் கருத்து வெளியிட்ட மனுதாரரான, விஜித றோகண விஜயமுனி, இந்தியாவின் அழுத்தத்தின் பேரிலேயே வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten