zaterdag 3 augustus 2013

இனவாத செயற்பாடுகளை அரசு கண்டிக்க தயங்குவது, முஸ்லிம்களை ஆத்திரமடைய செய்துள்ளது: ஹக்கீம்

இலங்கையில் விரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த தீர்மானம்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 05:51.48 AM GMT ]
திடீர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டினால், அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும்.
அதன் பின்னர் நிச்சயமாக அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடையும் தோல்வியை பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியினால் வெற்றியீட்ட முடியாது என்ற போதிலும் மாகாணத்தில் ஆளும் கட்சிக்கும் அதன் ஆதரவு கட்சிக்கும் கிடைக்கும் ஆதரவு கவனத்திற் கொள்ளப்பட உள்ளது.
எதிர்வரும் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியீட்டுவதனை தவிர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இனவாத செயற்பாடுகளை அரசு கண்டிக்க தயங்குவது, முஸ்லிம்களை ஆத்திரமடைய செய்துள்ளது: ஹக்கீம்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 05:57.56 AM GMT ]
மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்பான இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கண்டிக்க தயங்குவது முஸ்லிம் மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று நடைபெற்ற தந்தை செல்வா தொடர்பில் தான் ஆற்றிய நினைவுப் பேருரைகளின் தொகுப்பு நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
புனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய கேவலமான செயல் அரங்கேறியுள்ளது.
ஆனால் இச் செயலைக் கண்டிக்க அரசாங்கம் தயங்குகிறது. குறைந்தபட்சம் கண்டன அறிக்கையைக் கூட விடவில்லை. இது முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
குறிப்பிட்ட சில இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவத்தை அடக்க முடியாதுவிட்டாலும் அது பற்றி கண்டிக்கவும் முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கும் அச்ச உணர்வினை அரசுக்கெதிராக பிரயோகிக்க முயற்சிக்காது நாம் மாற்று வழிகளைக் காண தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டம் நமக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைகிறது.
தந்தை செல்வாவுக்கு முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அவரது சாத்வீகப் போராட்டங்களில் முஸ்லிம்கள் உணர்வு ரீதியாகப் பங்கேற்றுள்ளார்கள்.
இன்று முஸ்லிம் காங்கிரசை அரசாங்கம் சரியாக எடை போடமுடியாது தடுமாறுகிறது. எதிரக்கட்சியும் எம்மை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது.
நாங்கள் எதிர்வரும் மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுகிறோம். எமது கட்சியையையும் சமூகத்தையும் பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்தோம் என குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten