woensdag 7 februari 2018

பிரிகேடியர் தப்பியோட முன்னர் முடக்குங்கள்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் -


தமிழர்களை அச்சுறுத்தி கொல்வேன் என்று சைகையைக் காட்டிய இராணுவ அதிகாரி தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 4ம் திகதி இலங்கையின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. லண்டன் தூதரகத்திற்கு முன்னர் ஈழத் தமிழர்கள் சுதந்திர தினத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் போது அங்கிருந்த இராணுவ அதிகாரி தமிழ் மக்களைப் பார்த்து கழுத்தறுத்து கொலை செய்வேன் போன்று சைகையை காண்பித்தார். அவரின் இந்தச் செயற்பாடு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை தற்காலிகமாக பணியிடை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து இன்றைய தினம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவின் இராணுவப்பிரிவில் 59வது டிவிசனின் 11வது கெமுனு காவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இனப்படுகொலையினைப் புரிந்த சிறிலங்கா இராணுவத்தின் போர்குற்றவாளிகளில் ஒருவராக இருக்கின்ற குறித்த அதிகாரிக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய அரசினை நா.தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்றிருந்த போர்குற்றங்கள் பாரிய மனித உரிமை மீறல்களை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் இணை அனுசரணை நாடாக பிரித்தானிய இருக்கின்றது என்பதனை நா.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/173511?ref=home-top-trending

Geen opmerkingen:

Een reactie posten