woensdag 26 april 2017

மாவை சேனாதிராஜாவுக்கு மண்டை வறண்டு மூளையை கறையான் தின்று விட்டதா? சுரேஸ் கேள்வி

மாவை சேனாதிராஜாவுக்கு மண்டை வறண்டு மூளையை கறையான் தின்று விட்டதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேட்டுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் (25) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்ககோரி தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி கூறுகிறார் மக்களுடைய காணிகளை மக்களிடம் வழங்குவதற்காக படையினரிடம் விபரங்களை கேட்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள் வழங்கவில்லை.
அதே சமயம் இந்த விபரங்களை எதிர்பார்த்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் படையினருடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு நடத்திய சந்திப்பில் இராணுவம் கூறுகிறது.
சட்டத்திற்கு மாறாக மக்களின் காணிகளை வைத்திருக்க முடியாது என்றும் ஜனாதிபதி கூறினால் நாங்கள் காணிகளை விடுவோம் எனவும் இரு முரண்பட்ட கருத்துக்களை நாங்கள் பார்க்க வேண்டியிருக்கின்றது.
மேலும் படையினர், விமானப்படையினர், கடற்படையினரும் கூட மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றனர்.
குறிப்பாக கேப்பாபுலவு பகுதியில் மக்களுக்கு சொந்தமான 488 ஏக்கர் காணியில் 188 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு படையினர் இணங்கியிருக்கின்றனர்.
இந்த காணியில் மக்களுடைய பூர்வீக காணிகள் அடங்கியிருக்கவில்லை.
ஆகவே மக்களுடைய வளங்களை படையினர் தொடர்ந்தும் கொள்ளையடிப்பதற்கே படையினர் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் மக்களுடைய காணிகளை அடாத்தாக பிடித்து அடாத்தாகவே அங்கிருந்த மக்களின் வீடுகளை அழித்து தமது கட்டடங்களை அமைத்திருக்கும் படையினர் நிலங்களில் இருந்துவெளியேறுவதற்கு பணம் கேட்பது ரவுடி தனம் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
மேலும் நேற்றைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கடற்படைத் தளபதி தெளிவாகவே ஒரு விடயத்தை கூறியிருக்கின்றார். அதாவது முள்ளிக்குளம் பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்க இயலாது என நாடாளுமன்றில் ஏற்கனவே பிரதமர் கூறியிருக்கின்றார்.
ஆகவே அரசாங்கம் முதலில் மீள்குடியேற்றம் தொடர்பான ஒரு கொள்கையை உருவாக்கவேண்டியது அவசியமாகும்.
அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு இராணுவத்தினருடன் பேசுவதை ஏற்றுகொள்ள இயலாது.
காரணம் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துடன் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேசி மீள்குடியேற்றம் தொடர்பான கொள்கை ஒன்றை உருவாக்கவேண்டியது அவசியமாகும்.
மேலும் மக்கள் தங்கள் காணி உரிமைகளுக்காக கடந்த 2 மாதங்களாக போராட்டங்களை நடாத்தி வரும் நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆக்கபூர்வமான பதில் எதனையும் வழங்கவில்லை.
இதேபோல் இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2019ஆம் ஆண்டுவரை கால அவகாசம் கேட்டிருக்கும் நிலையில் இராணுவம் மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கு 2021ஆம் ஆண்டு வரையில் கால அவகாசத்தை கேட்கின்றது.
இது காலத்தை இழுத்தடிப்பதற்கான ஒரு செயலாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் காணி விடுவிப்பு தொடர்பாக சர்வதேச அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் காணி விடுவிப்பு இன்மை இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் ஐீ.எஸ்.பீ வரிச்சலுகை நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இங்கே மனித உரிமை நிலமைகள் மீள நல்ல நிலைக்கு சென்றிருப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் அந்த வரிச்சலுகையை வழங்கும்படி கேட்கிறார்கள்.
ஆனால் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியினால் இன்றைய தினம் ஐரோப்பிய நாடாளுமன்றில் மேற்படி வரிச்சலுகையை வழங்கவேண்டாம் என பேசப்பட்டிருக்கின்றது.
எனவே அவர்களுக்கு இந்த விடயம் தொடர்பாக பேசியமைக்காக நாங்கள் நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸ அந்த திட்டத்தை நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில் சமகாலத்தில் பல இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கும் நிலையில் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றியமைக்க இலங்கை அரசாங்கம் ஒப்புதல் வழங்கவேண்டும் எனவும், அதனை இந்திய அரசாங்கமும் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
வட, கிழக்கு மாகாணங்களில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் கடந்த சில மாதங்களாக போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களும், தமிழ்பேசும் மக்களும் ஒன்று திரண்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதற்கு நாங்களும் பூரணம ஒப்புதலை தெரிவிக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மக்களுடைய போராட்டங்களால் மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலை உள்ளதாக கூறியுள்ளார்.
அப்படி அவர் கூறுவதாயின் மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து விட்டு சொல்லவேண்டும்.
அந்த திராணி இல்லாமல் அவர் அப்படி பேச கூடாது. மேலும் இந்த அரசாங்கத்திற்கும் மஹிந்த அரசாங்கத்திற்குமிடையில் என்ன வித்தியாசத்தை மாவை சேனாதிராஜா கண்டுவிட்டார்? என நான் கேட்க விரும்புகிறேன்.
எனவே இவ்வாறு பேசுவதற்கு மாவை சேனாதிராஜா வெட்கப்படவேண்டும். இந்த கருத்துக்கள் மிக இழிவானவை.
அதேபோல் முள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒரு விடுதலை போரில் பல இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு
அந்த நாள் உதைபந்தாட்டம் நடத்துவதற்கான நாள் அல்ல. இந்த நிலையில் மாவை சேனாதிராஜா முள்ளிவாய்க்கால் நினைவு நாளை ஒட்டி நடத்தப்படும் ஒரு உதைபந்தாட்ட போட்டிக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றவர் தானும் ஒரு உதைபந்தாட்ட வீரர் என்ற அடிப்படையில் கலந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது சரியா என்பதை அவர் சீர்தூக்கி பார்க்கவேண்டும் என்பதுடன்மாவை சேனாதிராஜாவுக்கு மண்டை வறண்டு மூளையை கறையான் தின்று விட்டதா? எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/politics/01/143780?ref=lankasri-home-dekstop

Geen opmerkingen:

Een reactie posten