woensdag 8 februari 2017

தமிழர்களை மறைத்த புதிய வரலாறு.!! இது தமிழர்களுக்காக

ஓர் இனத்தின் வரலாறு மாற்றம் அடையும் போது அந்த இனத்தின் தொன்மையும் மாற்றம் அடைந்து போகும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
மிக முக்கியமானது மதம் சார்ந்து அல்லாமல் வரலாறுகள் படைக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி நடக்காத காரணத்தினாலேயே இலங்கையில் இன்று வரை பிரச்சினை.
இலங்கையின் தமிழர்களை புதிய வரலாறு கொண்டு மறைத்துள்ளார்கள் இலங்கை வரலாற்று எழுத்தாளர்கள். என்றாலும் இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சத்தை ஆராயும் போது சில தெளிவுகள் பிறக்கின்றன.
மகாவம்சம் என்பது இலங்கையின் வரலாற்றைக் கூறும் புராண நூல் அல்ல. இதன் கருப்பொருள் பௌத்தம் மட்டுமே. திரிபு படுத்தப்பட்ட அந்த வரலாற்று நூல் தமிழர்களின் பெருமையை மறைக்கின்றது.
ஆனாலும் அதனை ஆராயும் போது தமிழர்களின் இப்போதைய, அப்போதைய நிலையினை தெளிவு படுத்திக் கொள்ளமுடியும். அந்த வகையில் இலங்கை வரலாறு திரிபு படுத்தப் பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த வரலாறுகளையும் திரிபு படுத்த முடியாது.
இயற்கை வழிபாடுகள் மேற்கொண்டவர்களே இலங்கையின் பூர்வக் குடிகளான இயக்கரும் நாகரும் என மகாவம்சம் கூறுகின்றது. அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவில்.,
தமிழர்கள் அதாவது சேர சோழ பாண்டியர்கள் மேற்கொண்டது இதனையே என்பதும் வரலாறு. இந்து வேதங்களின் முதற்பகுதியில் இயற்கை வழிபாடுகளையே தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
“நாகர்” என்ற சொல் நாகம் அல்லது நாகர் என்ற தமிழ் சொல்லுடன் தொடர்பு பட்டதாகவும் இது தமிழர்களுக்கும் இலங்கையின் பூர்வ குடிகளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விஜயன் தன் தோழர்களுடன் இலங்கைக்கு வந்த பின்னர் இயக்கர் இனத்தின் குவேனியை மணந்துள்ளான். பின்னர் இந்தியாவில் இருந்து பாண்டிய நாட்டு இளவரசிகளை அழைத்து வந்து மணவாழ்வில் ஈடுபட்டுள்ளான்.
இது இலங்கையில் ஆரம்ப காதத்தில் தென்னிந்திய தமிழர்களில் கலவையை எடுத்துக் காட்டுகின்றது. ஆனாலும் மகாவம்சத்தில் இது திரிபு படுத்தப்பட்டுள்ளது.
“சிகல” என்ற சொல் மகாவம்சத்தின் மூல நூலான தீபவம்சத்தில் இருந்தே வந்துள்ளது. 4ஆம் மற்றும் 5ஆம் நூற்றாண்டுகள் வரை இலங்கையில் “தமிழ், பாளி, பிராமி, மற்றும் கலிங்க மொழிகளே இருந்து வந்துள்ளது.
இம் மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியின் கலப்பு கொண்டவை என்றே தெரிவிக்கப்படுகின்றது.
அது மட்டும் அல்லாது நாக இனத்தின் மக்களின் பரம்பரைப் பெயர்களாக நாகன், தீசன், சிவன் ஆகியன காணப்பட்டுள்ளது. இவை தமிழ்ப்பெயர்கள் என்பது உலகறியும்.
மேலும், அநுராதபுரத்தினை கிமு 307 – 247 களில் ஆண்ட நாக மன்னன் மூத்தசிவனின், மகன் தேவநம்பியதீசனின் சகோதரன் மகாநாகனின் மூன்றாம் தலைமுறை இளவரசன் காக்கவண்ண தீசனுக்கும்.,
களனியினை ஆண்ட நாக மன்னனின் மகள் விகாரமாதேவிக்கும் பிறந்த துட்டகைமுனுவே கிமு 101-77களில் ஆட்சி செய்துள்ளான் அவனே மகாவம்சம் கூறும் நாயகன்.
நாகர் குல மன்னனான எல்லாளனுக்கும் துட்டகைமுனுவிற்கும் இடையே பௌத்தத்திற்கும் வைதீகம் அல்லது ஆதி சைவ மதத்திற்கும் யுத்தம் ஏற்பட்டுள்ளது. அதுவே பிற்காலத்தில் யுத்தம் சிங்கள தமிழ் யுத்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது துட்டைகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம் இலங்கை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
எல்லாளனை நெருங்குவதற்காக 32 தமிழ் மன்னர்களுடன் துட்டைகைமுனு யுத்தம் செய்து வென்றதாக மகாவம்சம் சிறப்பாக கூறுகின்றது.
இந்த விடயம் கி மு 2ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் இலங்கையில் பரவலாக வசித்தமைக்கு முக்கிய சான்றாகும். 32 குறுநில மன்னர்கள் கொண்ட ஆட்சி அப்போது இலங்கையில் இருந்துள்ளது.
இங்கு குறிப்பிட்டு கூறப்பட வேண்டியது அந்த யுத்தத்தில் துட்டைகமுனுவின் படையில் பௌத்த மதத்தை தழுவிய தமிழர்களும் இருந்தார்கள்.
எல்லாளனின் படைதளபதியான மித்தனின் சகோதரன் மகன் நந்தமித்தன் துட்டகைமுனுவின் பிரதான தளபதிகளில் ஒருவனாக செயற்பட்டதாகவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
இது தமிழர்களின் தோல்விக்கான காரணத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் ஒன்று அதே நிலைதான் இப்போது வரையிலும் தொடர்கின்றது.
அதேபோன்று இலங்கையில் ஆரம்ப வரலாறு சங்க இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சங்க தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்றது “பரணன்” என்கின்ற கவிஞனின் பெயர்.
துட்டகைமுனுவின் உதவியாளர் படையில் இதே பெயர் கொண்ட வீரன் உள்வாங்கப்பட்டுள்ளான். இது மகாவம்சம் இருபதாம் அத்தியாத்தில் கூறப்பட்டுள்ளது.
அதே போல் இலங்கைக்கு வந்த ஐந்து தேரர்களில் ஒருவரான உதியன் மற்றும் உதியன் என்கின்ற மன்னனனுடைய பெயரும் சங்க காலத்தில வாழ்ந்த மன்னன் உதியன் சேரலாதனை என்பவனையே எடுத்துக் காட்டுகின்றது.
இவை மகாவம்வத்தில் 20 ஆம் அத்தியாயத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பார்க்கும் போது.,
தமிழர்களின் நிலையை மாற்றியமைத்து வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று வகை வரலாறு காரணமாகவே இலங்கைத் தீவின் பிரச்சினை தொடர்ந்து கொண்டு வருகின்றது என்பது தெளிவு.

Geen opmerkingen:

Een reactie posten