zondag 15 februari 2015

கோத்தபாய உத்தியோகபூர்வமற்ற வீட்டுக்காவலில்? சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் விற்பனை!..

பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் நிமால் சிறிபால டி சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 06:31.12 AM GMT ]
பொது தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளர் தொடர்பாக தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் ஜனாதிபதியே பிரதம வேட்பாளரை தெரிவு செய்வார் என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதுவரை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கான தினத்தை அறிவிக்காததினால் பிரதம வேட்பாளர் குறித்து பின்னர் தீர்மானிக்க முடியும் எனவும், வேட்பு மனு தாக்கல் தொடர்பாக கட்சியின் தெரிவுக்குழுவிடம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேண்டுகோள் முன்வைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
போட்டியிடுபவர் யாராக இருப்பினும் கட்சியின் தெரிவுக்குழு அனுமதி வழங்கிய பின்னரே போட்டியிட முடியும்.
மேலும் பிரதம வேட்பாளரை நியமிப்பது ஜனாதிபதியே எனவும் இது தொடர்பாக யாரும் கணிப்பு சொல்ல முடியாது எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் நிமால் சிறிபால டி சில்வா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதமர் பதவியை எதிர்ப்பார்த்து, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பல்வேறு அவதூறு பேச்சுக்களை வெளியிட்ட நிமால் சிறிபால டி சில்வாவுக்கு மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நிமால் சிறிபால டி சில்வா,
பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
இன்னும் தேர்தல் நடத்தும் திகதி அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை வெல்லும் நபரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார்.
இதனால், எதிர்கால பிரதமர் யார் என்பது பற்றி எதிர்வுகூற முடியாது என நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன கவர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டு அந்த பதவியை பிடிக்கும் ஆசையில் நிமால் சிறிபால டி சில்வா இருந்து வருவதாக தெரியவருகிறது.
இதற்காக அவர் ஊடக நண்பர்கள் சிலரிடமும் ஒத்துழைப்புகளை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdep3.html

அரிசி விலை குறைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்: காலியில் பிரதமர் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 06:39.46 AM GMT ]
விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரிசி, பால், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களுக்கு நிர்ணய விலை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே அவ் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என, காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்று பலரின் கேள்வியாக இருப்பது ஏன் அரிசி விலை குறைக்கப்படவில்லை என்பதாகும். விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் அரிசி விலையை குறைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அத்தியாவசிய 10 பொருட்களின் விலை குறைக்கப்பதாகவே வாக்கு கொடுத்தோம் எனினும் 13 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
அரிசி விலை குறைக்காமைக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுகேகொடை கூட்டம் சுதந்திரக் கட்சியின் கூட்டமல்ல: அனுர பிரியதர்ஷன யாப்பா
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 07:00.28 AM GMT ]
மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் அரசியலில் அனாதைகளாக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இவர்கள் இணைந்து எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடந்தும் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்து கொள்ளாது என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரிதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் இணைந்து அந்த கூட்டத்தை நடத்துவதாகவும் அதில் தமது கட்சி கலந்து கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தோல்வியடைந்த ஜனாதிபதியை மீண்டும் பிரதமராக்கும் முயற்சிகளோ, கோரிக்கைகளோ சுதந்திரக் கட்சிக்குள் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பட்டுள்ளார்.

பிரதமரின் சட்டம் தெவரப்பெருமவுக்கு மாத்திரமா?: ஐ.தே.கட்சியினர் கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 07:25.27 AM GMT ]
போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 5 நாளில் பிணை வழங்கப்பட்டது.
எனினும் சிறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கடந்த ஒன்றரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சிறிய காயம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இவருக்கு பொலிஸார் கூட பிணை வழங்க முடியும்.
எனினும் தெவரப்பெருமவுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதன் காரணமாகவே அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவிக்கின்றனர்.
போலி ஆவணம் தயாரித்த திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 5 நாளில் பிணை வழங்கப்பட்டது. ஹெரோயின் வியாபாரி துமிந்த சில்வா கைது செய்யப்படவோ விளக்கமறியலில் வைக்கப்படவோ இல்லை.
இந்தநிலையில், தெவரப்பெரும தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சில காலங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க கத்தியால் குத்த முயற்சித்ததன் காரணமாகவே அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறியுள்ளனர்.
தெவரப் பெருமவுக்கு தண்டனை வழங்கப்படுவது கட்டாயம் என்ற போதிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் செயற்படுவது கீழ் மட்டத்தில் இருக்கும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இது கட்சிக்கு கடும் பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/news-3.html



கோத்தபாய உத்தியோகபூர்வமற்ற வீட்டுக்காவலில்? சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் விற்பனை!..
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 08:11.23 AM GMT ]
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமைச்சின் அதிகாரங்களுக்கு அப்பால் சென்று வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளார் என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டின் பாதுகாப்பு படையினரிடம் இருந்த பெற்ற நவீன ஆயுதங்களை, கோத்தபாய ராஜபக்ச துணை இராணுவத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், போக்கோ ஹராம், கடற்கொள்ளையர்களுக்கு விற்றுள்ளார். இதன்மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்துள்ள தகவல்களை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இலங்கை படையினருக்கு இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்கள் மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்து, 2009 ஆம் ஆண்டு முதல் கோத்தபாய பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளார்.
கோத்தபாயவின் தொடர்புடன் பல்வேறு நபர்களின் பெயர்களில் இந்த பணம் பல உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியத்தில் இருந்து 20 கொள்கலன் பெட்டிகளுக்கு மேலதிகமாக மூன்று கொள்கலன் பெட்டிகள் காலி கடற்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டன. அவற்றில் இருந்த ஆயுதங்கள் படைகளில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஆயுதங்கள் அல்ல.
இந்த ஆயுதங்களில் கனரக ஆயுதங்களும் இருந்துள்ளதுடன் அவை சிவில் பாதுகாப்புக்கு பயன்படாத, போர் களத்தில் மாத்திரம் பயன்படுத்தப்படக் கூடிய ஆயுதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பில் ஒரு துணைப் படைக்குரிய களஞ்சியத்தில் இருந்து மாத்திரம் ஆயிரத்து 555 ரி.56 ரக துப்பாக்கிகளும் 14 லட்சம் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில், பொலிஸார் மாத்திரம் பயன்படுத்தும் எஸ்.84 ரக துப்பாக்கிகளும் இருந்துள்ளன. பொலிஸார் பயன்படுத்தும் இந்த துப்பாக்கிகள் பொலிஸ்மா அதிபர் எந்த சந்தர்ப்பத்திலும் வேறு பாதுகாப்பு பிரிவுகளுக்கு வழங்கியதில்லை.
அப்படியானால், எந்த அனுமதியில் இந்த துப்பாக்கிகள் துணைப்படையின் களஞ்சியத்திற்கு வந்தது?. அனுமதி வழங்கியது யார்?, இந்த ஆயுதங்கள் இலங்கையில் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்யவே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த மிகப் பெரிய ஆயுத பயன்பாடு மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அனுமதிப் பெறப்படவில்லை என கோத்தபாயவின் துணைப்படை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கலில் சம்பாதித்த பணம் நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவின் பெயரில் உள்ள பல்வேறு வங்கிகளில் உள்ள 58 கணக்குகளில் வைப்ப்புச் செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
உலக பிரபல்யம் பெற்ற ஆபத்தான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், போக்கோ ஹராம், அல்- கைதா, இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா, ஹமாஸ், பட்டா அல் சலாம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு, பல்வேறு கடற்கொள்ளை குழுக்களுக்கும் இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனதுடன் பல கோடி ரூபா பணம் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.
எவண் காட், ரக்னா லங்க போன்ற கோத்தபாயவின் துணைப்படைகள் குறித்து கண்டறியப்பட்டுள்ள தகவல்களின் படி அந்த இரண்டு துணைப்படைகளின் பணிப்பாளர்கள் மியன்மார், சோமாலியா, எரித்திரியா, சூடான், சீசெல்ஸ், மொசேம்பிக், கென்யா, தன்சானியா, நைஜீரியா, டோகோ, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோத்தபாயவுக்கு 50 பேரின் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையில் அவர் உத்தியோகபூர்வமற்ற வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பில் இருந்து தகவல் தரும் நபர்கள் கூறுகின்றனர்.
கோத்தபாயவின் இந்த ஆயுத விற்பனை குறித்து சர்வதேச நாடுகளும் கண்காணித்து வந்ததுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட விசேட தரப்பினர் தற்போது இலங்கை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeq1.html

மகிந்தவின் குற்றங்களை கண்டு கொள்ளாத ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 07:44.27 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இடம் பெற்ற ஊழல் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சி தேடாமல் இருப்பது சந்தேகத்த ஏற்படுத்துவதாக ஜே.வி.பியின்  மாகாண சபை உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது, மகிந்தவை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி விரும்புதாக தெரிகின்றது.
ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நான் நினைப்பது ஒன்றும் தவறில்லை.
ஏன் என்றால் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிரிந்தால் நல்லது என நினைக்கின்றார்கள் என்று தான் தோன்றுகின்றது.
அதன் பின்னர் மகிந்தவை அழைத்து வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கைவிடபட்டவர்களுடன் ஒன்றினையலாம் என ரணில் விகரமசிங்க நினைத்திருப்பார்.
மகிந்தவை மீண்டும் கொண்டுவருவதற்கான அவசியம் ஐ.தே.கவிற்கு இருக்குமென்றால் மகிந்த தொடர்பாக குற்றங்களை ஐ.தே.கவினர் முன்னோக்கி கொண்டு செல்ல மாட்டார்கள்.
இதனால் தான் மகிந்தவின் குற்றங்களை குறித்து ஐ.தே.க கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றது என லால் காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeqy.html

Geen opmerkingen:

Een reactie posten