dinsdag 17 februari 2015

அறிக்கை பிற்போடும் ஐ.நாவின் முடிவு: அமெரிக்கா, இலங்கை வரவேற்பு

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜே.வி.பி அழைப்பு: நிஷாந்த
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 03:58.00 AM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலில் புதிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
நேற்று காலியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிஷாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான முயற்சிகள் தற்பொழுது வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாகாணசபை உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட காலியில் நேற்று இடம் பெற்ற வேறு ஒரு நிகழ்வில் கலந்துக்காண்டு கருத்து தெரிவிக்கும்போது,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக நிஷாந்த முத்து ஹெட்டிகம பாரிய சேவைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவியாக இருக்கும்: பிரித்தானியா
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 04:07.26 AM GMT ]
இலங்கையில் நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கு போரின்போது இடம்பெற்ற சம்பவங்களின் உண்மைகளை வெளிக்கொணர்வது முக்கிய விடயமாக இருக்கும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செப்டம்பருக்கு பிற்போட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை தொடர்பான அறிக்கையை செப்டம்பர் வரைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஒத்திவைத்தமை மூலம் குற்றவாளிகள் தப்பிக்க இடமுண்டு என்று சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் கொலைகள் சட்டவிரோத கைதுகள் காணாமல் போதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாடுகளின் அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
எனினும் அவர்களுக்கு தற்போது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக மன்னிப்புசபையின் ஆசிய பசுபிக் வலயப்பணிப்பாளர் ரிச்சட் பேனாட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இந்த தாமதிப்பு புதிய இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து உரிய தகவல்களை பெற்று உண்மைக் குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் கொண்டு வந்தால் மாத்திரம் நியாயப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று பேனாட் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno1G.html

அறிக்கை பிற்போடும் ஐ.நாவின் முடிவு: அமெரிக்கா, இலங்கை வரவேற்பு
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 05:50.00 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடும் ஐ.நாவின் தீர்மானத்தை, அமெரிக்காவும், இலங்கையும் வரவேற்றுள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அதையடுத்து. ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வரவேற்கிறது.
எல்லாத் தரப்புகளினதும், கரிசனைகளையும் திருப்திப்படுத்துவதற்கு அமெரிக்கா ஊக்கமளிக்கிறது.
விசாரணை அறிக்கை தாமதிக்கப்படுவது மனித உரிமை விவகாரங்களில் ஒத்துழைப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கத்திற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசாரணை அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடும் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவரும் வரவேற்றுள்ளார்.
இது பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கான ஜனநாயக செயல்முறைகளை உருவாக்கும் புதிய அரசாங்கத்தின் நகர்வுக்கு ஆதரவாக சரியான நேரத்தில், எடுக்கப்பட்ட முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno2C.html

Geen opmerkingen:

Een reactie posten