மட்டக்களப்பில் கன மழை! மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு - கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 06:16.15 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்து பெய்து வரும் கன மழையினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ் நில பிரதேசங்களான கரடியனாறு, வாகரை, செங்கலடி மற்றும் பட்டிப்பளை போன்ற பிரதேச செயலகங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உன்னிச்சை உறுகாமம், கட்டுமுறிவு,வில்லுக்குளம் போன்ற குளங்களின் வான் கதவு திறக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
அவ்வாறு திறந்தால் மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் அதிகரித்து ஊறணி, குடியிருப்பு, வந்தாறுமுலை, ஏறாவூர், சந்திவெளி, பனிச்சங்கேணி, பால்சேனை போன்ற தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலையும், மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி பாதிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது.
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக கந்தளாய்க் குளத்தின் நீர் மட்டம் 115000 கன அடியாக உயர்த்துள்ளது. இதனையடுத்து ஒரே நேரத்தில் 10 வான் கதவுகள் 1.5 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஒரு நிமிடத்துக்கு மூவாயிரம் கன அடி நீர் கந்தளாய்க் குளத்தில் இருந்து வெளியேறுகின்றது. இதன்காரணமாக குளத்தை அண்டிய திவுல்ஹஸ்வௌ, பேராறு போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, அடை மழை காரணமாக கிண்ணியாவில் பெரியாற்றுமுனை, றஹ்மாணியா நகர், மாஞ்சோலை, அண்ணல் நகர் போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
http://www.tamilwin.com/show-RUmszCRUKakt0.html
தொலைக்காட்சி விவாதங்களில் ஜே.வி.பிக்கு வெட்டு!
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 06:49.26 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தொலைக்காட்சிகள் ஜே.வி.பியை மறந்து விட்டு செயற்பட்டு வந்தால், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் அந்த தொலைக்காட்சிகளின் அரசியல் நிகழ்ச்சிகளை ஜே.வி.பி புறக்கணிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர்கள் கூடி இந்த விடயம் குறித்து கலந்துரையாடிய போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் உறுப்பினர்களின் வாதத் திறமை காரணமாக ஆளும் கட்சியின் வாயடைத்து போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் ஜே.வி.பியினருக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என அரசாங்கத்தின் உயர் மட்டம் ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakt3.html
ராஜபக்சவின் இனப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்!- ராமதாஸ்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 06:41.20 AM GMT ]
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அதிபர் தேர்தலையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட இனப் படுகொலையாளன் இராஜபக்சே, கடந்த காலங்களில் நடந்ததை தமிழர்கள் மறந்துவிட வேண்டும்; இலங்கையின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இலங்கை அதிபராக இரு முறை பதவி வகித்து இப்போது மூன்றாவது முறையாக அப்பதவியை கைப்பற்றத் துடிக்கும் ராஜபக்சவின் இந்தப் பேச்சு அவரது ஆணவத்தையும், தமிழர்களை மிரட்டும் மனப்பான்மையையும் தான் காட்டுகிறது.
அதுமட்டுமின்றி, ஈரான், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் நடந்தது போன்ற மக்கள் புரட்சியை ஒருபோதும் இலங்கையில் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அச்சுறுத்தும் தொனியில் பேசியிருக்கிறார்.
தமிழர்களுக்கு ஒருபோதும் சம அதிகாரமும், சம உரிமையும் வழங்க முடியாது என்பதை பல்வேறு தருணங்களில் தெளிவுபடுத்தியுள்ள ராஜபக்ச, இப்போது இப்படி கூறுவதன் மூலம் எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்; ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ, உரிமைகளைக் கோரியோ போராட நினைக்காதீர்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
துரோகங்களையும், சதிகளையும் மன்னித்து, மறப்பது தான் தமிழர்களின் குணம் ஆகும். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு ராஜபக்ச செய்த கொடுமைகள் கற்பனை செய்துபார்க்க முடியாதவை. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்ததுடன், போரில் தப்பிய மூன்றரை லட்சம் தமிழர்களை முகாமுக்குள் அடைத்து வைத்து கண்ணியமான வாழ்க்கையை வாழ விடாமல் தடுத்தவன் தான் இந்த ராஜபக்ச.
போர் முடிந்து ஐந்தரை ஆண்டுகள் ஆன போதிலும் தமிழர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தி அச்சுறுத்துதல், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குதல், கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை செய்தல் என இன அழிப்பில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறது ராஜபக்ச தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு.
ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒட்டுமொத்த இலங்கையும் தமிழர்களின் தாயகமாக இருந்தது. அதை சிங்களர்கள் நயவஞ்சகமாக தங்களுடையதாக்கிக் கொண்டனர். அதன்பிறகும் இலங்கையின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பங்களிப்பை தமிழர்கள் செய்தனர்.
ஆனால், இதற்கெல்லாம் பரிசாக தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி கொக்கரித்து கொண்டிருக்கின்றனர் சிங்களவர்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு தமக்கு வாக்களிக்கும்படி ராஜபக்ச வெட்கமின்றி கோருகிறார்.
கடந்த தேர்தலில் தமிழர்களை படுகொலை செய்ததை சாதனையாக கூறி சிங்கள இன உணர்வுகளை தட்டி எழுப்பி வெற்றி பெற்ற அவர், இம்முறை தமிழர்களை நயவஞ்சக வலையில் வீழ்த்தி வெற்றி பெறத் துடிக்கிறார்.
இந்த வலையில் ஈழத் தமிழர்கள் வீழ மாட்டார்கள். அதேபோல், தமிழினத்திற்கு ராஜபக்ச செய்த இனப்படுகொலை உள்ளிட்ட கொடுமைகளை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
இலங்கை இனப் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் ஓய மாட்டார்கள்.
ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் தமிழர்களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு இந்தியாவும், மற்ற நாடுகளும் உதவி செய்ய வேண்டும்.
தமிழீழ கோரிக்கை குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakt2.html
Geen opmerkingen:
Een reactie posten