[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 07:20.16 AM GMT ]
உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வலைத்தள பதிவாளர்களின் முதலாது ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள வலைத்தள பதிவாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
46 வலைத்தள பதிவாளர்கள் இலங்கை வந்துள்ளதுடன் மாநாடு நாளை ஆரம்பமாக உள்ளது.
உலகில் முக்கிய வலைத்தள பதிவாளர்கள் நேற்று பொலனநறுவையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சைக்கிள்களில் சென்று பார்வையிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp6.html
வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கான தடை
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 07:29.40 AM GMT ]
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
ஆளுநருக்கு முழு அதிகாரத்தையும் வழங்கி வட மாகாண சபையை அரசாங்கம் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருணை காட்டினால் மாத்திரமே அந்த சபையினூடாக எதுவும் இடம்பெறலாம் எனும் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபைமீது அரசாங்கம் தான்தோன்றித்தனமான முறையில் தலையீடுகளை செய்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளில் வட மாகாண சபையைத் தவிர ஏனைய அனைத்து மாகாணசபைகளும் 13வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை ஏதோ ஒருவகையில் அனுபவிக்கின்றன. ஆனால் யாருக்காக மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதோ அவர்களின் மாகாணத்துக்கு மட்டும் அதிகாரம் இல்லை.
வடமாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுனரின் கையில் உள்ளன. அதற்கான சக்தியை ஜனாதிபதியே கொடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் கருணை இல்லாவிட்டால் வடமாகாண சபைக்கு எதுவுமே செய்யமுடியாது. வடமாகாண முதலமைச்சருக்கு தனது தலைமைச் செயலாளரைக்கூட நியமிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தமது ஆதங்கத்தை இவ்வாறு வெளிக்காட்டியிருக்கின்றார்.
இதேபோல் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிகார மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்துக்கொண்டு அவற்றை இயங்கவிடாது முடங்கச் செய்துள்ளது. மாகாண சபையில் உறுப்பினர்களாக அனுபவம் பெற்ற பெரும்பாலானோர் இந்த சபையில் இன்று உறுப்பினர்களாக உள்ளனர்.
மத்திய அரசாங்கம் மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை பறித்து வருகின்றது. சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு என்பன மத்திய அமைச்சிலும் மாகாண அமைச்சிலும் உள்ளன.
ஆனால் இன்று இவ்வமைச்சுக்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. மாகாண சபைகளுக்குச் சொந்தமான சில வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.
மாகாண சபைகளின் அமைச்சுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் முதலமைச்சர்களின் சம்மேளனங்களின் போது ஏகமனதாக நிறைவேற்றப்படும் பிரேரணைகள் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அந்த அதிகாரத்தையும் மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது.
முதலமைச்சர்களின் சம்மேளனம் வெறுமனே ஒரு மரண சகாய நிதி உதவிச் சங்கமாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு குற்றம்சாட்டிய நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவும் மாகாண சபைகளை மத்திய அரசாங்கம் அடிமைப்படுத்தாது அதனை சுயாதீனமாக இயங்கும் நிலையை ஏற்படுத்தி மக்களுக்கு நேரடியான சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வரவேண்டும்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் கிராம மக்களுடன் நேரடியாக தொடர்புபட்ட மக்கள் அமைப்புக்களாகும்.
எனவே மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் அடிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது.
முதலமைச்சர்களின் சம்மேளனத்தில் நிறைவேற்றப்படும் பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை இல்லை.
அந்தப் பிரகடனங்களை முதலமைச்சரினால் நடைமுறைப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுனர்கள், மாகாண சபை நிர்வாகத்துக்கிடையே முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது இவை தொடர்பிலான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார யதார்த்தபூர்வமாக கருத்து தெரிவித்திருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்த விவாதத்தில் உரையாற்றிய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா வடமாகாண சபையினதோ அல்லது வடமாகாண சபை முதலமைச்சரினதோ எந்தவொரு அதிகாரத்தினையும் மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறி இருக்கின்றார்.
இவ்வாறு மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்கள் வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளில் 8 மாகாண சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் வசமே உள்ளன.
வட மாகாண சபையின் ஆட்சி மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்ட போது அந்த மாகாண சபையினையும் கைப்பற்றும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.
ஆனாலும் வட மாகாண மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பேராதரவினை வழங்கி மாகாண சபை நிர்வாகத்தை கூட்டமைப்பிடம் கையளித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் மத்திய அரசாங்கத்துடன் முரண்படாது நல்லிணக்கத்துடன் செயற்படுவதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அரசாங்கத்துக்கு காண்பித்திருந்தார்.
பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் முதலமைச்சராக சி.வி. விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.
தனது அமைச்சுப் பொறுப்புக்களைக்கூட ஜனாதிபதி முன்னிலையிலேயே அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்வாறு நல்லெண்ண வெளிப்பாட்டை காண்பித்த முதலமைச்சர் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட முன்வந்திருந்தார்
வடமாகாண ஆளுனராக சிவில் நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும் மாகாண பிரதம செயலாளராக புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கோரியிருந்தார்.
இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் 2ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து முதலமைச்சர் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
அப்போது இந்த இரு விடயங்களுக்கும் இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி அதனையும் நடைமுறைப்படுத்தவில்லை.
அரசாங்கத்துடனான நல்லிணக்க முயற்சிகள் தோல்வியடைந்ததால் வடமாகாணசபை நிர்வாகத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இதன் காரணமாக வடமாகாண சபையின் செயற்பாடுகளை உரிய வகையில் மேற்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டிருக்கின்றது.
வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தடைகளை ஏற்படுத்திவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.
எனவே, எதிர்காலத்திலாவது வடமாகாண சபையின் செயற்பாடுகள் உரிய வகையில் தங்குதடையின்றி இடம்பெறுவதற்கு விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp7.html
Geen opmerkingen:
Een reactie posten