woensdag 19 november 2014

யாழில் முன்னாள் போராளியைக் காணவில்லையென முறைப்பாடு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவசர அமைச்சரவைக் கூட்டம் - மஹிந்தவின் தோல்வி நிச்சயம்! விக்டர் ஐவன்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 06:15.48 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களையும் பங்கேற்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது குறித்த உத்தியோகபூர்வ ஆவணம் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.
மஹிந்தவின் தோல்வி நிச்சயம்! அடித்துச் சொல்கின்றார் விக்டர் ஐவன்
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என்று ராவய பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
நேற்றிரவு பீ.பீ.சி. சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விக்டர் ஐவன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தற்போதைய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.
தற்போதைய அரசியல் சூழலில் அதுரலியே ரத்ன தேரர் அருமையான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது எதிர்க்கட்சிகளின் சாமர்த்தியத்தில் தங்கியுள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip1.html
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் 18 கடற்படை தளங்களை அமைக்க சீனா திட்டம்?
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 06:03.03 AM GMT ]
எதிர்வரும் 10 வருடங்களுக்குள் சீன மக்கள் விடுதலை கடற்படை இலங்கை உட்பட்ட ஆசிய  நாடுகளில் 18 கடற்படைத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்து சமுத்திரத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்மத்திய பகுதிகளில் பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் இந்த கடற்படைத் தளங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொன்சிங் துறைமுகம் (தென்கொரியா), மொரெஸ்பி துறைமுகம் (பப்புவா நியூகினியா), சிகனோக்வில்லே துறைமுகம் (கம்போடியா), கோ லண்டா துறைமுகம் (தாய்லாந்து), சிட்வே துறைமுகம் (மியான்மார்), டக்கா துறைமுகம் (பங்களாதேஸ்), க்வாட்டர் துறைமுகம் (பாகிஸ்தான்), அம்பாந்தோட்டை துறைமுகம் (இலங்கை), மாலைதீவு, சிச்சேயில்ஸ் உள்ளிட்ட இடங்களில் சீனா தனது கடற்படை தளங்களை அமைக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின் மூலம் பிராந்திய மற்றும் உலக உறுதித் தன்மை, சர்வதேச கடல்வழிப் பாதை பாதுகாப்பு போன்றவற்றை தக்கவைத்துக் கொள்ள சீனா முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளும் பொருட்டு சீனா பரஸ்பர நன்மை, நட்பு ஆலோசனை போன்றவற்றை வழங்கி கடற்படைத் தளங்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனாவானது அமெரிக்கா போன்ற கடற்படைத் தளங்களை அமைத்துக் கொள்ளவில்லை என்ற விமர்சனமும் வெளி உலகில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
உலகில் இரண்டாவது பெரிய கடற்படையை கொண்ட நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
சீன கடற்படையில் பல்திறமை கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip0.html
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே முஸ்லிம் காங்கிரஸின் முடிவு
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 06:39.48 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போது நடந்து வரும் மாற்றங்கள் குறித்து தமது கட்சி ஆராய்ந்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டதும் முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பிரதியமைச்சர் ஏ.எல்,ஏ.எம் ஹிஸ்புல்லா, முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கக் கூடும் என கூறியிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் அனைவரும் அவருக்கே ஆதரவளிப்பார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றி கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று இரவு அலரி மாளிகையில் கூடுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் குறித்த சில முக்கிய விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip3.html
திணைக்களங்கள் எந்த அமைச்சுக்கு சொந்தம் என்பதை அறிய முடியவில்லை: அசோக அபேசிங்க
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 07:02.59 AM GMT ]
அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், சில திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் எந்த அமைச்சுக்கு சொந்தம் என்பதை அறிந்துள்ள முடியாதிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விசேட திட்டங்கள் அமைச்சு உட்பட 10 அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரத்து 951 கோடி ரூபா நிதியை விட ஜனாதிபதியின் செலவுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு மாத்திரம் ஆயிரத்து 971 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவுக்கு கண்டிக்கு ஹெலிக்கொப்டரில் ஜனாதிபதி சென்றார்.
அங்கிருந்து வைபவம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்காக தனியார் காணி ஒன்றின் ஊடாக வீதி அமைக்கப்பட்டது.அதற்கான செலவு 55 லட்சம் ரூபா.
ஜனாதிபதி அந்த வீதியில் வந்த போதும் திரும்பி அதில் செல்லவில்லை.
காணி முன்பு இருந்தது போல் மீண்டும் செய்து தரப்படும் என குறித்த தனியார் காணி உரிமையாளரிடம் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதனபடி அந்த வீதி மூடப்பட்டது.
ஒருநாளுக்கு செய்த இந்த வீண்விரயம் பற்றி ஜனாதிபதி அறிந்திருக்கமாட்டார். எமது பிரதேசங்களில் இப்படியான வீண் விரய செலவுகள் செய்யப்படுகின்றன எனவும் அசோக அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmszBSdKYip4.html

யாழில் முன்னாள் போராளியைக் காணவில்லையென முறைப்பாடு
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 07:05.00 AM GMT ]
யாழ். குருநகர் ஐந்து மாடிக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோனிமுத்து அன்டன் ஜெயரோன் (வயது 31) என்பவரை கடந்த 17ஆம் திகதி முதல் காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
தனது கணவரைக் காணவில்லையென அவரது மனைவி நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
கடையொன்றுக்கு சென்று வருவதாக சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இவர், அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டவராகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYip5.html

Geen opmerkingen:

Een reactie posten