maandag 27 oktober 2014

தடைகளைத் தகர்க்க குமார் ரெடி: கைது செய்ய அரசாங்கம் தயார்?

காரைதீவு பிரதேச சபைக் காணியில் உள்வேலி அமைப்பது தவறா?: கேள்வி எழுப்புகிறார் யோ.கோபிகாந்த்
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 05:28.12 AM GMT ]
காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான விபுலானந்தா சதுக்க காணிக்குள் உள்ள புதிய பிரதேச சபைக் கட்டடத்திற்கு பாதுகாப்பு நோக்கம் கருதி வேலி இடப்பட்ட போது சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொலிசாருக்கு முறைப்பாட்டினை தெரிவித்து வேலியிடும் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் யோ.கோபிகாந்த் கருத்து தெரிவிக்கையில்:
கடந்த 2ம் திகதி காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான காணியினுள் சபையின் வருமானத்தை கருத்தில் கொண்டு வளவின் சிறிய பகுதியினுடாக தற்காலிக பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்ட போது சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் வரை வேலி செப்பனிடும் பணியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 1905ம் ஆண்டு உள்ள உறுதியின் பிரகாரம் காரைதீவை சேர்ந்த மாணிக்கப்பிள்ளை சிவசம்பு என்பவருக்கும் அவரின் மனைவி இளையதம்பி தங்கப்பிள்ளை என்பவருக்கும் சொந்தமான காணியாக இருந்தது. பின்னர் இவர்கள் பரம்பரையாக தச்சு தொழில் செய்து வந்த அன்ரனி செலஸ்ரியன் என்பவருக்கு விற்றுக் கையளித்துள்ளார்.
மேலும் இவ் உறுதியில் கூறப்பட்டதற்கமையவும் தற்போது அக்காணிக்கு அருகில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களும் டச் (DUTCH) இனத்தை (பறங்கியர்) சார்ந்தவர்கள் குடியிருந்து வருவதும் சான்று. அக்காணி தொன்று தொட்டு தச்சர் அடிச்சந்தி எனும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. இப்பெயரினை சகோதர இனத்தவர்கள் தங்களது வசதிக்கமைய பெயர் மாற்றம் செய்து தச்சா சந்தி என அழைக்கின்றனர்.
இது டச் (பறங்கியர்- DUTCH) இருந்த இடத்தினால் தான் தச்சர் அடிச்சந்தி என வந்தது எமது மூதாதையர் மூலம் நாம் அறிந்தோம். உறுதியில் கூறப்பட்ட அன்ரனி செலஸ்ரியன் என்பவருக்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தாலும் அவரினை பராமரித்த காரணத்தாலும் தற்போதுள்ள ஜெயநாதன் (ஓய்வுநிலைக் கோட்டக்கல்வி அதிகாரி) அவர்களின் பாட்டியிற்கு இதன் பின்னர் 1956 ஆண்டு காரைதீவுக் கிராமாட்சி மன்றத்தின் தலைவரான விநாயகமூர்த்தி அவர்களின் வேண்டுகோளின் படி, அக்காலத்தில (1956) மட்டக்களப்பு மாவட்டத்தின் நிருவாக எல்லையினுள்ளே தற்போதைய அம்பாறை மாவட்டம் காணப்பட்டமையால், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் காரைதீவு கிராமாட்சி மன்றத்திற்கு 9 அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் தற்போது பிணக்கிலுள்ள விபுலானந்த சதுக்க காணியும் ஒன்றாகும். மேலும் 1930 ம் ஆண்டு நில அளவை திணைக்களத்தினால் வரையப்பட்ட நில அளவைப்படத்திலும் இது ஒரு அரச காணியாகவே காட்டப்பட்டுள்ளது.
இக்காணியானது 1956 ம் ஆண்டு காரைதீவு கிராமராட்சி மன்றத்திற்கு சந்தை அமைக்க வழங்கப்பட்டதாக அவ் ஆவணத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அத்தோடு 1996 ம் ஆண்டு நில அளவைத்திணைக்களத்தால் காரைதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு காரைதீவு பிரதேச செயலகத்தினால் (அரச காணியை நிருவகிக்கும் அதிகாரம் பிரதேச செயலகத்திற்கு உரியதாகும்) வழங்குவதற்காக நில அளவை செய்யப்பட்டது. இதன் போது அந்நில அளவை படத்திலே சந்தை கட்டிட வளவு என கூறப்பட்டதாலும், அவ்வளவு பிரதேச சபைக்கு சொந்தமானது என்பதாலும் அக்காணியை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்காமல் கைவிடப்பட்டது.
மேலும் இக்காணியினுள் தற்போது ஆட்சி உரிமம் கோருவது போல் சில ஆவணங்களை தயாரித்தும் பெற்றும் வைத்திருக்கும் சாய்ந்தமருதுப் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஆரம்ப காலத்தில் அதாவது 2006 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் நிந்தவூர் பிரதேச சபையுடன் எமது காரைதீவு கிராமாட்சி மன்றம் இருந்ததாலும், பின்னரான காலப்பகுதியில் அதாவது 2006 ம் ஆண்டு எமது காரைதீவு பிரதேச சபை தனியாக வந்ததன் பின்னர் நிந்தவூர் பிரதேச சபையினால் எமது காரைதீவு சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் தராமலும் அழிந்து எரிந்து விட்டதாகவும் கூறப்பட்டதாலும் மிக முக்கியமான பல ஆவணங்கள் உட்பட எமது சபைக்கு தர வேண்டிய பல இலட்சம் ரூபாயும் தராமலும் மறுக்கப்பட்டது.
இவ்வாறு மறுக்கப்பட்ட அழிந்த ஆவணங்களாக கூறப்பட்ட ஆவணங்களில் முக்கியமானது இன்று முஸ்லிம்களால் உரிமை கோரப்படும் எமது சபைக்கு சொந்தமான விபுலானந்தா சதுக்கம் காணியும் ஒன்றாகும்.
இருப்பினும் எனது முயற்சியினால் இது தொடர்பான ஆவணங்களை இப்போது போதுமானளவு திரட்டியுள்ளேன். மேலும் இது வரை காலமும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் பெயரில் ரசீது வழங்கப்பட்டு வந்ததான தேங்காய் விற்ற பணம், வயல் குத்தகைக்கு விடப்பட்டதன் மூலம் கிடைத்த பணம் மற்றும் எமது பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டியிருந்த அனர்த்தத்தின் போதான சந்தைக்கட்டிட அழிவுகளுக்கான இடர் கொடுப்பனவு (அரசாங்கத்தால் வழங்கப்பட்ட) போன்ற அனைத்து பணமும் எமது பிரதேச சபைக்கு கட்ட வேண்டும். அல்லது இது தொடர்பிலாக பிரதேச சபைக்கு சொந்தமான காணியை முறை கேடாக பயன்படுத்தியமைக்காக சட்ட நடவடடிக்கையினையும் மேற்கொள்ள திடமாயிருக்கிறேன்.
மேலும், பிரதேச சபையின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு உண்டு எனும் அடிப்படையில் நான் செயற்பட வேண்டிய தேவையும் என்னைச் சார்ந்ததாகும்.
கடந்த 15-08-2014 ம் திகதி சாய்ந்தமருது ஜூம்ஆப்பள்ளிவாசல் நிருவாகத்தினர் எல்லையிடுவதாக கூறி கற்களை அத்து மீறி பறித்ததுடன் இதன்போது திரண்ட மக்கள் மத்தியில் ஊடகத்திற்கு பள்ளிவாசல் நிருவாகத்தின் சார்பில் கருத்து தெரிவித்த ஒருவர் இவ்விடத்தில் பள்ளிவாசல் கட்டப்போவதாக கூறியதனால் தான் அன்று மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை கலவரமடைய செய்யாமலிருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். மேலும் அன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான வளவாக இருந்தும் எல்லை போடாமல் கூட்ட தீர்மானத்தை மதித்து எல்லை போடாமலும் தவிர்த்திருந்தேன், அத்துடன் தற்போது முறைப்பாடு தெரிவித்த வேலியானது எமது பிரதேச சபைக்கட்டிடத்திற்கு சந்தைக் காணியிலிருந்து ஒதுக்கப்பட்ட எல்லையினையே இட்டுள்ளேன்.
இதனை தவறானதாக யாரும் கூறமுடியாது. மேலும் பள்ளிவாசல் நிருவாகத்தினால் கோரப்படும் காணியானதும் எமது பிரதேச சபைக்கு சொந்தமான காணி என்பதனையும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmx1.html
ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலி: அமைச்சர் வாசு
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 05:52.22 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலி என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடுமையாக சாடியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக் கட்சியின் ஆதரவு குறித்து நேற்று மாலை சிங்கள வானொலியொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி தொடர்பில் எங்களுக்கு கடுமையான ஆட்சேபனைகள் உள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ரத்து, சர்வாதிகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படல், நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பன எமது அசைக்க முடியாத கொள்கைகளாகும்.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பொறுத்தே நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது. கொள்கை ரீதியாக நாங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியாக செயல்படுகின்றது. பொதுமக்களுக்கு அக்கட்சி மூலம் எதுவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. உயர்தர மேட்டுக்குடியினர் மட்டுமே அக்கட்சி மூலம் பலன் அடைவார்கள். அதன் காரணமாக அக்கட்சிக்கு ஆதரவு என்ற ஒருபோதும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmx2.html
தடைகளைத் தகர்க்க குமார் ரெடி: கைது செய்ய அரசாங்கம் தயார்?
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 06:21.33 AM GMT ]
இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தகர்த்தெறிந்து மீண்டும் இலங்கை திரும்ப குமார் குணரத்தினம் தீர்மானித்துள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் இலங்கை அரசின் தடைசெய்யப்பட்டவர்கள் பட்டியல் இல் உள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் வாழும் அவர், அரசியல் நடவடிக்கைகளுக்காக இலங்கை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு குமார் குணரத்தினம் நாடுதிரும்ப தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம் நாளை அதிகாலை கொழும்பு வரும் விமானமொன்றில் அவர் இலங்கை திரும்பவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவர் இலங்கை வந்தால் உடனடியாக கைது செய்யவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
இதற்கு முன்னரும் 2011ம் ஆண்டு நொயெல் முதலிகே என்ற சிங்களப் பெயரில் இலங்கைக்குள் நுழைந்திருந்த குமார் குணரத்தினம் சிறிது காலம் தலைமறைவாக இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
எனினும் 2012ம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு கடத்தப்பட்ட அவர், பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் அலுவலகம் முன்பாக வீசியெறியப்பட்டிருந்தார்.
பின்னர் மீண்டும் நாடு திரும்பக் கூடாது என்ற நிபந்தனையுடன் அரசாங்கம் அவரை நாடு கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmx3.html

Geen opmerkingen:

Een reactie posten