woensdag 27 augustus 2014

மொரிசனுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள புகலிடக் கோரிக்கையாளரான 6 வயது சிறுமி! (செய்தித் துளிகள்)!

சிங்கள நோயாளிகளுக்கு இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்!
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 11:38.14 PM GMT ]
மூளை இறந்த நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பெண் ஒருவரின் இரு சிறுநீரகங்கள் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இரு சிங்கள இனத்தவர்களுக்கு கண்டி ஆஸ்பத்திரியில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது.
சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதோடு, அவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சாலிய பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மொனராகல, பெதியாய கிராமத்தில் வசித்த மூன்று பிள்ளைகளின் தாயான கோவிந்தசாமி விக்னேஸ்வரி (41 வயது) என்பவரின் இரு சிறுநீரகங்களே இவ்வாறு இரு உயிர்களை காப்பாற்றப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்ற மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் கோவிந்தசாமி விக்னேஸ்வரியின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கண்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்து, சத்திர சிகிச்சைகள் மூலம் சிங்கள இனத்தவருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொத்துவில் கோயிலுக்கு பிள்ளைகளுடன் சென்ற வேளை இவர்கள் பயணித்த ஆட்டோ எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனது மனைவி படுகாயமடைந்ததாக சிறுநீரகத்தை அன்பளிப்புச் செய்த  விக்னேஸ்வரியின் கணவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மனைவியின் மூளை இறந்துள்ளதால் அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அவரின் சிறுநீரகத்தை இரு நோயாளர்களுக்கு வழங்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.
இதன் மூலம், தனது மனைவிக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், மண்ணோடு மண்ணாகும் உடலை இவ்வாறு நற்காரியத்திற்கு பயன்படுத்த முடிந்தது குறித்து மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.
மனைவியின் சிறுநீரகங்கள் சிங்கள இனத்தவர் இருவருக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். எமக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என பேதம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdew3.html
மொரிசனுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள புகலிடக் கோரிக்கையாளரான 6 வயது சிறுமி! (செய்தித் துளிகள்)
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 12:01.59 AM GMT ]
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் காயமடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் மத்திய அரசாங்கத்திற்கும், குடிவரவு அமைச்சர் மொரிசனுக்கும் எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் காயமடைந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மருத்து பராமரிப்பு வழங்குமாறு அரசாங்கத்திற்கும், அமைச்சர் ஸ்கொட் மொரிசனுக்கும் உத்தரவிடக் கோரி விக்டோரியா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏஎஸ் என்று இனங்காணப்படும் ஆறு வயதுடைய சிறுமி பிரதான மனுதாரராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த சிறுமிக்கு பற்களில் தொற்றும், ஒவ்வாமையும் ஏற்பட்டிருக்கிறது. இவர் பிரிவின் துயரால் அவதியுறுவதுடன், PTSD என்ற உளவியல் அதிர்ச்சி நிலையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ஜேக்கப் வர்கீஸ் கருத்து வெளியிடுகையில், கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கான சுகாதார பராமரிப்பு வசதிகளில் பல குறைபாடுகள் உள்ளதாகத் தெரிவித்தார். இதற்குரிய ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
குவந்தனாமோ சிறைக் கைதிகளுக்கு நிகராக அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களை நடாத்துகின்றது
உலகின் மிகவும் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாக கருதப்படும் குவந்தனாமோ சிறைச்சாலையின் கைதிகளுக்கு நிகராக அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினவரின் பரிந்துரைகளுக்கு அமைய நான்கு புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் கால வரையறையின்றி முகமாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களை நடாத்தும் விதம் குறித்து ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் 44 புகலிடக் கோரிக்கையாளர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் சுமத்தாது கடந்த ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டமைக்கான காரணங்களை அறிந்து கொள்ள இதுவரையில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சர்வதேச பிரகடனங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளானது மனிதாபிமானற்ற வகையில் அமைந்துள்ளதாக சிட்னி பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் பென் சாவுல் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbLdew4.html

Geen opmerkingen:

Een reactie posten