[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 11:24.37 PM GMT ]
போர் இடம்பெற்ற காலத்தில் அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பிலும், அதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் விரைவில் அமெரிக்க காங்கிரஸ் சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் சாதாரண சட்டத்திற்கான நியூயோர்க் சட்டக்கல்லூரி பேராசிரியர் ரயன் குட்மான் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கை இன, மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க காங்கிரஸ் சபையின் முன்னிலையில் பேராசிரியர் ரயன் குட்மான் சில பரிந்துரைகளை செய்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுளளது.
இரண்டு வழிகளில் இலங்கை தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளன.
பாதுகாப்புச் செயலாளருக்கு எந்த அமெரிக்க சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர்வது என்பது குறித்து பரிந்துரை செய்யப்படவுள்ளது.
இலங்கைக்கு இராணுவ ரீதியான ஒத்துழைப்பு, நிதி உதவிகள் போன்றவற்றை வழங்கக் கூடாது என வலியுறுத்தும் வகையிலான அறிக்கையொன்று அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்காத போதிலும், ஜீ.எஸ்.பி வரிச் சலுகை முடக்கம் போன்ற பல்வேறு வழிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குட்மானின் பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHSdLcmx0.html
அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி?- இலங்கையில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன!
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:32.21 AM GMT ]
அளுத்கம, பேருவளை சம்பவங்களைத் தொடர்ந்து அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பவங்களின் போது அரசாங்கத்தின் நடவடிக்கையினால் சிங்கள பௌத்த மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள பௌத்த மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் வாக்காளர்களும் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்வதற்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமே காரணம்.
ஹக்கீம் வெளியிட்டு வரும் அரச விரோத கருத்துக்களே முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
ஹக்கீம் நடவடிக்கைகளினால், அரசாங்கத்துடன் நட்பு பாராட்டி வந்த அமைச்சர் ரிசாட் பதியூதீன், அதாவுல்லா போன்றவர்களும் எதிராக செயற்படத் தொடங்கியுள்ளனர் என அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன
இலங்கையில் தபால் கட்டணங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி சாதாரண தபால்களுக்கான முத்திரை கட்டணங்கள் 5 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன.
வியாபார கடிதங்களுக்கான கட்டணங்கள் 5 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன என்று தபால் மா அதிபர் ரோஹன அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 6 வருடங்களாக தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. எனவே தற்போது இந்த அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானித்ததாக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பொதிகளுக்கான தபால் கட்டணங்கள்( 500 கிராம்) 90 ரூபாவாக இருக்கும். தபால் பைகளுக்கான கட்டணங்கள் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRULcmx5.html
அரசாங்கத்திற்கு சொந்தமான 10,000 ஏக்கர் காணியை அரசியல்வாதிகள் அபகரித்துள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:47.35 AM GMT ]
கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் கூட்டாக இணைந்து பத்தாயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரித்துள்ளனர்.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் இந்த தகவலை சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
புத்தளம், அனுராதபுரம், பொலனறுவை, கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் இவ்வாறு காணிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் காணிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர்கள், அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றுவதனால் இந்த சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULcmx7.html
கொள்கலனில் போதைப் பொருள் கடத்திய முக்கியஸ்தர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை!– ஒமல்பே சோபித தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:54.58 AM GMT ]
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொள்கலன் ஒன்றில் பாரியளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டிருந்தது. கிறிஸ் டின்களில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட இந்தப் போதைப் பொருட்களின் மொத்த எடை 260 கிலோ கிராம்களாகும்.
பாரியளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கியஸ்தர்கள் சிறைகளில் தண்டனை அனுபவிக்கின்றார்களா?
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டது என்பதனை பொலிஸார் நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
சர்ச்சை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சில அதிகாரிகள் பதவி விலக்கப்பட்ட போதிலும் தற்போது அவர்கள், பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் உண்மை நிலைமை என்ன?
போதைப் பொருள் கொள்கலனில் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எந்தவிதமான பேதமும் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலுடன் பாதாள உலகக் குழுக்கள் மட்டுமன்றி எதிர்பார்க்க முடியாத சில நபர்களும் தொடர்புபட்டிருப்பதாக கிடைக்கப்பெறும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களை மட்டும் காவல்துறையினர் கைது செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULcloy.html
Geen opmerkingen:
Een reactie posten