maandag 17 maart 2014

சட்ட ஒழுங்கு நாட்டில் இருக்கின்றதா? மனித எலும்புக் கூடுகள் எழுப்பும் கேள்வி!!

வவுனியா மாங்குளம் பாடசாலை ஆசிரியர் கார்த்திகேசு நிரூபனின் எலும்புக் கூடும், அவரது ஆடை அடையாளங்களும் மீட்கப்பட்டுள்ளன.
போர் முடிந்து மூன்றாண்டுகளின் பின் தான் கற்பித்த பாடசாலைக்கு கடமையின் பொருட்டு பயணித்த ஆசிரியர் கடத்தப்பட்டு காணாமற் போனமை தொடர்பில் காவல்துறையிடத்திலும், மனித உரிமை ஆணையகத்திலும் உறவினரும் ஆசிரியர் சங்கத்தினரும் முறையீடு செய்திருந்தும், போராட்டங்கள் நடாத்தியிருந்தும் சம்பந்தப்பட்ட அதிகார பீடங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்துப் பதிலளித்திருக்கவில்லை. இதுதான் இந்நாட்டு நடப்பாகும்.
தற்போது கொல்லப்பட்ட நிரூபனின் உடல் புதைக்கப்பட்ட இடம் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட பொழுது பொதுமக்களால் நிரூபனின் உடல் எலும்புக்கூடு என்று அடையாளங்கண்டிருப்பது, அதிர்ச்சியளித்துள்ளது.
யார் இந்த ஆசிரியரை கடத்திக் கொலை செய்தார்கள்? அதற்கான காரணமென்ன? மனித உரிமை ஆணையகத்தினரோ, காவல் துறையினரோ ஏன் தேடுதலில் ஈடுபட்டுப் பதிலளிக்கவில்லை? இவர்கள் பொறுப்புக் கூறும் கடமையில் தவறியுள்ளனர்?
தற்போது எலும்புக் கூடு அடையாளம் காணப்பட்டிருப்பதால் இதற்கு காவல்துறை, அரசு பதிலளிக்க வேண்டும்.
எங்கு பார்த்தாலும் மனித எலும்புக் கூடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதல்ல விதைக்கப்பட்டுள்ளன.
தமிழர் பிரதேசங்களில் இராணுவம் குவிக்கப்பட்டு, இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, தமிழர் நிலங்களும் விடுவிக்கப்பட்டு அந்த நிலங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறும்போது இன்னும் எலும்புக் கூடுகளும் புதைகுழிகளும் தோன்றக் கூடும்.
இவற்றிற்கு பொறுப்புக் கூறும், நம்பத் தகுந்த சட்டம் ஒழுங்கு நடவடிக்கை இங்கு இல்லை. உண்மைகள் வெளிக் கொணரவேண்டும். அதற்கு நம்பத்தகுந்த விசாரணை வேண்டும்.
இதற்கான போராட்டங்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர் சங்கம் அறிவித்திருக்கிறது. இப்போராட்டங்களை நாம் ஆதரிக்க வேண்டும். இந்த ஆத்மாக்களுக்காவது நாம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவது அத்தியவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என வற்புறுத்துகின்றோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVes4.html

Geen opmerkingen:

Een reactie posten