maandag 10 maart 2014

சனல்-4வின் புதிய காணொளியில் விடுதலைப் புலிகள் என்கிறார் இராணுவப் பேச்சாளர் !

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்கே சனல்-4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் வெளியான காணொளியினை நிராகரித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, தற்போது வெளியாகியுள்ள காணொளியைப் போன்று பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி முன்னரும் வெளியிட்டதாக கூறியுள்ளார்.
மேலும், புதிதாக வெளியிடப்பட்ட போர்க்குற்றங்கள் இலங்கையில் இடம்பெற்றது என்பதற்கு ஆதாரமில்லை.
அக் காணொளியில் காண்பிக்கப்படும் ஆண்களின் முகங்கள், மற்றும் சீருடைகள் விடுதலைப் புலிகளாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இறந்த பெண் போராளிகளின் உடல்மீது பாலியல் கொடுமைகளை இலங்கை இராணுவத்தினர் செய்துள்ளனர்! - கெலம் மக்ரே
இலங்கையின் உள்நாட்டுப் பேரின் துயரமான இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான படங்களில் எந்த தவறுகளும் இல்லை எனவும் அந்த காட்சிகளை தான் பார்த்திருப்பதாகவும் அவை மோசமான காட்சிகள் எனவும் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
போரில் 5 மரணங்கள் நிகழ்வது சிறிய சம்பவமாக இருக்கலாம், ஆனால் போரின் இறுதி சில மாதங்களில் அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல்களினால் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது ஒரு சிறிய விடயமல்ல.
அந்த காட்சிகளில் இறந்த பெண் போராளிகள் மீது அவர்களின் உடல்கள் மீது திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை இராணுவத்தினர் செய்துள்ளனர்.
இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்பது சரியாக எமக்கு தெரியாது. போரின் இறுதியான இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவை படமாக்கப்பட்டிருக்கலாம்.
ஒரு இராணுவ வீரர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். அதில் மற்றுமொரு இராணுவ வீரர் சிங்களத்தில் பேசுகிறார்.
அந்த காணொளில் இருக்கும் படையினர் அதிரடிப் படையினராக இருக்கலாம். அவர்கள் இறந்த புலிகளின் பெண் போராளிகளின் உடலில் பாலியல் வன்கொடுமைகளை செய்து சிரித்து ஆரவாரம் செய்கின்றனர்.
இவர்கள் யார் என்பதும் உண்மையில் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது. அவர்கள் சீருடைகளையும் அணிந்திருக்கவில்லை. ஆனால் போராளிகள் என்று தோன்றுகிறது.
இந்த படங்களை முன்னணி தடய அறிவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் ஆய்வு செய்ததுடன் படங்களில் உள்ள காயங்கள் உண்மையானது எனவும் காணொளிகள் போலியானவை அல்ல என்பதையும் உறுதிப்படுத்தினார்.
உடல்களில் காணப்படும் சில காயங்கள் போர்க் களத்தில் ஏற்பட்டதாக நீங்கள் எதிர்பார்க்கலாம் ஆனால் அந்த காயங்கள் அப்படியானதாக இருக்கவில்லை என அவர் ஆச்சரியம் தெரிவித்தார்.
இந்த காயங்கள் ஒட்டுமொத்த படுகொலைகள் தான் என்பதற்கான சாத்தியத்தை தவிர்க்க முடியாது என்றும் துப்பாக்கிகளினால் சுடப்பட்டதால் இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பிரித்தானியா தமிழர் பேரவை எமக்கு வழங்கியிருந்த டிஜிட்டல் காணொளிகளை பிரித்தானிய நீதிமன்றத்தில் பணிப்புரியும் சுயாதீமான மரியாதைக்குரிய ஒருவர் ஆராய்ந்தார் அவரும் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த காணொளிகள் தொடர்பில் பதிலளித்த இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தினரை போன்ற சீருடையணிந்து பெரும்பான்மை சிங்கள இராணுவத்தினரை போல் சிங்களத்தில் பேசியுள்ளதாக கூறியது.
சிறுவர்களை படையில் இணைத்து, பொதுமக்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசாங்கம் தனது சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த அதனை பயன்படுத்த முடியாது.
விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் போரின் போது பிடிபட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளிகளை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது எனவும் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten