zaterdag 3 augustus 2013

வரலாற்று சிறப்புமிக்க நிலாவரை கிணற்றில் இருந்து புத்தூர் மக்களுக்கு குடிநீர் விநியோகம்- விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஆய்வு

இரத்தினபுரியில் இனந்தெரியாத நபர்களினால் ஒருவர் சுட்டுக் கொலை- யாழில் 8 பிள்ளைகளின் தாய் தற்கொலை
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 08:35.12 AM GMT ]
இரத்தினபுரி பிரதேசத்தில் காரை நிறுத்தி விட்டு வீதியில் நின்றிருந்த ஒருவர் இனந்தெரரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான விஜித மனோரத்ன என்ற இவர், இரத்தினபுரி நகரில் உள்ள அரச மரக் கூட்டுத்தானத்திற்கு சொந்தமான மர தளப்பாட கட்சியறையின் களஞ்சியத்திற்கு பொறுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
பிரதேசத்தில் வீடொன்றில் நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு வீட்டில் இருந்து செல்லும் வழியில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதுவரை சந்தேக நபர்கள் பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் எட்டு பிள்ளைகளின் தாய் யாழ்ப்பாணத்தில் தற்கொலை
யாழ்ப்பாணத்தில் சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் குடும்ப பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.சுதுமலை பகுதியிலுள்ள எட்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இவ்வாறு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டுக்குச் சென்ற சீட்டுக்காரனின் அவமான பேச்சைத் தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சீட்டு, மீற்றர் வட்டி, காசோலை மோசடி போன்ற செயற்பாடுகளால் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்புமிக்க நிலாவரை கிணற்றில் இருந்து புத்தூர் மக்களுக்கு குடிநீர் விநியோகம்- விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஆய்வு
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 09:58.43 AM GMT ]
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புத்தூர் பிரதேசத்தில் உள்ள நிலாவரை என்ற ஆழத்தை கண்டுப்பிடிக்க முடியாத வரலாற்று சிறப்புமிக்க கிணற்றில் இருந்து பிரதேசத்தில் 21 கிலோ மீற்றர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிணறு அமைந்துள்ள பிரதேசம் தொல்பொருள் ஆராச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும். அந்த பகுதியில் வேறு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமாயின் திணைக்களத்திடம் அனுமதிபெற வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்ட நீர் வழங்கல் வடிக்காலமைப்பு அதிகாரிகள் அதற்கான அனுமதியை பெற்று கொள்ள முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தொல் பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அதிகாரியான ஜயந்த விஜேரடனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய அதிகாரிகள், தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்கவிடம் இருந்து அதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக நீர் வழங்கல் திட்டத்தை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் புத்தூர் பிரதேசத்தை சூழவுள்ள 21 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தின் விவசாய உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விசேட திட்டம் குறித்து ஆய்வு
யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
இன்றைய தினம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் விவசாய உற்பத்தி, ஏற்றுமதி, சந்தையை ஏற்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய விசேட கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாணத்தைச் சேர்ந்த அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், அகில இலங்கை விவசாயக் கூட்டுறவுச் சங்க தலைவர் நவரட்ண, விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், சரத் பிரேம குமார, அத்துல பிரியந்த, சந்தண பிரியர், கே.எல்.பெரேரா எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten