zaterdag 17 augustus 2013

பல கைவிடப்பட்ட கிணறுகளில் மேலும் மனித புதை குழிகள் ?

சர்ச்சைக்குரிய பருத்தித்துறை பல்லப்பை பகுதியில் பல கைவிடப்பட்ட கிணறுகளில் மேலும் மனித புதை குழிகள் இருக்கலாமென நம்பப்படுகின்றது. ஏற்கனவே தகவல் வெளியான கைவிடப்பட்ட புதை குழி கிணறுகள் தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது அங்கு குடியமர்ந்துள்ள குடும்பங்கள் இத்தகைய தகவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. தமது துப்புரவு செய்யப்பட்ட கிணற்றினுள்ளும் 4முதல் ஜந்து வரையான மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளை கண்டதாகவும் இளநீர்க்கோம்பைகள் மற்றும் குப்பைகளால் அவை மூடப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்த குடும்பஸ்தர் ஒருவர் அருகிலுள்ள படை முகாமொன்றிற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அவர்கள் அதனை எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். 

எனினும் இது தொடர்பாக பத்திரிகையாளர்களிற்கு பகிரங்கமான பேட்டிகளை வழங்க மறுக்கும் குடியிருப்பாளர்கள் தமது விபரங்களை பகிரவும் மறுக்கிறார்கள். நீங்கள் போய்விடுவீர்கள் பின்னர் படையினர் வந்து என்ன செய்வார்கள் என்பது தெரியும் தானேயென அவர்கள் கூறுகின்றார்கள். சம்பவ இடங்களிற்கு நேரில் விஜயம் செய்து பொதுமக்களுடன் இன்று காலை பேசிய கூட்டமைப்பின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை பிரதி தலைவர் சஜீவன் குறித்த 17 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பாக முழுமையான விபரங்களை அறிந்த சிலர் தமக்கு செய்தியை உறுதிப்படுத்திய போதும் அச்சங்காரணமாக பகிரங்க தகவல்களை வழங்க மறுத்ததாகவும் தெரிவித்தார். 

எனினும் புதைகுழிகள் இருக்கலாமென நம்பப்படும் கிணறுகளை அவர்கள் அறிந்து வைத்துள்ளதுடன் தமக்கு காண்பித்ததாகவும் கஜீபன் தெரிவித்தார். குறித்த புதைகுழிகள் தொடர்பாக கண்டறியவும் ஏற்கனவே படையினரால் எடுத்துச் செல்லப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளிற்கு என்ன நடந்தது என்பதை கண்டறியவும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் தேவையென கோரிக்கைகள் வலுப்பெற தொடங்கியுள்ளது. 1996 இன் பின்னராக சுமார் இரண்டாயிரம் வரையான இளைஞர் யுவதிகள் யாழ்குடநாட்டில் படையினரால் கடத்தி செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten