donderdag 15 augustus 2013

குருணாகலையில் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவு: ஆளும்கட்சி வேட்பாளர்களிடையே உக்கிர மோதல்

மன்னார் கூட்டமைப்பு வேட்பாளர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 02:16.37 AM GMT ]
மன்னார் மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்றவர்கள் குறித்த விபரங்களை புலனாய்வு தரப்பினர் திரட்டி வருகின்றனர்.
இரவு வேளைகளில் இவ்வாறான இரண்டுக் குழுக்கள் தனித்தனியே வந்து வேட்பாளர்களின் விபரங்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த விபரங்களை சேகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய புனாய்வு தரப்பினர் மன்னார் மாவட்ட இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் ஆகிய இரண்டுக் குழுக்கள் இவ்வாறு வீடுகளுக்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தி இந்த தகவல்களை பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குருணாகலையில் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவு: ஆளும்கட்சி வேட்பாளர்களிடையே உக்கிர மோதல்
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 02:37.15 AM GMT ]
எதிர்வரும் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் இதுவரையில் 92 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் மத்திய நிலையத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் குருணாகல் மாவட்டத்திலிருத்தே கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி குருணாகல் மாவட்டத்தில் 23 முறைப்பாடுகளும், மாத்தளையில் 16 முறைப்பாடுகளும் கண்டியில் 11 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதுதவிர, வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகப்படியாக 8 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஆதரவு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் நேற்று நிக்கவெரட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.
நிக்கவெரட்டிய ஜயந்தி மாவத்தையில் உள்ள ஐமசுமு.யின் தயாசிறி, சாலிந்த, ஜயரத்ன ஹேரத் பிரிவு ஆதரவாளர் வன்னிநாயக்க வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
தனது வீட்டுக்கு வந்தவர்கள் தன்னை வெளியில் வருமாறு அழைத்து பின் வீட்டின் யன்னல்கள், கதவுகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடாத்தியதாகவும் அரசாங்க தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தாலும் அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளதெனவும் பாதிக்கப்பட்ட வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் ஐமசுமு சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர் குழுக்களுக்கு இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக கபே இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பாஉ இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோர் ஒரு குழுவாகவும் தயாசிறி ஜயசேகர, பியூமால் ஹேரத், மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் ஒரு பிரிவாகவும் செயற்படுகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten