donderdag 8 augustus 2013

தேர்தல் விதிகளுக்கு முரணாக ஈபிடிபி பா.உ. சந்திரகுமார் பிரசார நடவடிக்கை! கூட்டமைப்பு முறைப்பாடு


நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக வயோதிபர்கள் இறப்பதாக தகவல்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 01:18.19 PM GMT ]
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக வயோதிப பருவத்தில் இருப்பவர்கள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் குளிரை தாங்கி கொள்ள முடியாது பல வயோதிபர்கள் இறந்து விட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் சுகவீனமான நிலைமையில் இருக்கும் வயோதிபர்களின் உடல் நிலை இந்த காலநிலை காரணமாக மிகவும் மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளுக்கு முரணாக ஈபிடிபி பா.உ. சந்திரகுமார் பிரசார நடவடிக்கை! கூட்டமைப்பு முறைப்பாடு
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 11:26.50 AM GMT ]
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசசார்பு ஈ.பி.டி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தேர்தல் விதிகளுக்கு முரணாக அரசாங்கள் ஊழியர்களைக் கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கையிலும், வேட்பாளர் அறிமுக நிகழ்வினையும் நடத்தியமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூல முறைப்பாட்டினையும் வழங்கியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
2013.08.08
தேர்தல்கள் ஆணையாளர்
தேர்தல்கள் திணைக்களம்,
கொழும்பு.
வடக்கு மாகாணசபை
வடக்கு மாகாண சபைத் தேர்தல் – 2013 தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுதல்:
2013.08.07ம் திகதி புதன்கிழமை மதியம் 12.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை கிளிநொச்சி உதயநகரில் அமைந்துள்ள “சோலைவனம்” விடுதியில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 35க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களை அபிவிருத்திக் கூட்டம் என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அழைப்பதாகக் கூறி வரவழைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை நடாத்தியதுடன் மதிய போசனமும் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
புதன்கிழமை என்பது கிராம அலுவலர்கள் பிரதேச செயலகத்தில் மக்களைச் சந்திக்கும் வேலை நாளாகும். அவர்களது கடமை நேரத்தில் இந்தத் தேர்தல் விதிமுறை மீறல் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் கிராம அலுவலர்கள் தேர்தல் பணி தொடர்பில் நடு நிலையாகச் செயற்பட வேண்டியவர்களாக இருந்தும் அவர்களைக் கட்டாயப்படுத்தி அரசியல் பிரச்சாரம் செய்தமை இலங்கையில் சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான தேர்தலைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களான வைத்தியநாதன் தவநாதன், அன்ரன் அன்பழகன், கந்தசாமி பிரகலாதன் ஆகியோர் வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடமை நேரத்தில் கிளிநொச்சி அரச செயலக தற்காலிக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன், கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.கணேசலிங்கம் ஆகியோர் கடமையைத் துஷ்பிரயோகம் செய்து இந் நிகழ்வில் பங்கு கொண்டு தேர்தல் பிரச்சார உரையையும் நிகழ்த்தியுள்ளனர்.
இதில் அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 2011ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளிலும் தனது தற்காலிக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பதவியினைப் பயன்படுத்தித் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக நடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக அப்பட்டமான இத் தேர்தல் விதிமுறை மீறலுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
நன்றி
சி.சிறீதரன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.
பிரதிகள்:
1. தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர், அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்டம்.
2. பணிப்பாளர்,  நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம். (CAFFE)
3. பணிப்பாளர்,  நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு. (PUFFREL)
4. பணிப்பாளர் – மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். (CPA)

Geen opmerkingen:

Een reactie posten