zaterdag 10 augustus 2013

யாழ்.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 13ம் திகதி நடமாடும் சேவை- தற்காலிக அடையாள அட்டையைப் பெற கால அவகாசம் நீடிப்பு!


வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கபே அமைப்பின் அனுசரனையுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
கபே அமைப்பின் அனுசரணையுடன் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெறும் தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவையில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நடமாடும் சேவையில் அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்தல், தொலைந்தமைக்கான விண்ணப்பங்கள் மற்றும் பழுதடைந்த அல்லது திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்த கோப்பாய் பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் பிறப்புச் சான்றிதழ், விவாகச் சான்றிதழ் உட்பட அதற்கு தேவையான சகல ஆவணங்களையும் தயார்படுத்தி வைத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பொலிஸ் அறிக்கை, சத்தியக்கடதாசி, புகைப்படம், முத்திரை என்பனவும் அன்றைய தினம் இலவசமாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியர்களிற்கான விசேட கருமபீடமும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மேலும் தெரிவித்தார்.
தற்காலிக அடையாள அட்டையைப் பெற கால அவகாசம் நீடிப்பு
மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 3ம் திகதி வரை தற்காலிக அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமென் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தற்காலிக அடையாள அட்டைகளை கிராம சேவகர் மற்றும் தோட்ட அத்தியட்சகர்களிடமும் பெற்றக் கொள்ள முடியுமென மேலதிக தேர்தல் ஆணையாளர். ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதவிர, தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டையைத் தவிர, கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் அரச ஊழியர்களின் ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை என்பற்றைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten