zondag 28 juli 2013

தேர்தல் சட்டங்களை மீறி 500 சிங்கள குடும்பங்களை வடக்கில் குடியேற்றுகிறது அரசாங்கம்


வடக்கில் தேர்தல் நடத்தவுள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறி சுமார் 500 சிங்கள குடும்பங்களை பயிர்ச்செய்கைக்கான காணி உட்பட வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான காணியையும் வட மாகாணத்தில் வழங்குவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாணத்தில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிரந்தரமாக குடியிருக்காத சிங்களக் குடும்பங்களை இவ்வாறு பதவிய, பராக்கிரமபுர, ஹொரவப்பொத்தான பிரதேசங்களிலிலுள்ள எல்லைகளிலுள்ள வட மாகாணத்தில் குடியேற்றி வருவதாக அறிவிக்கப்படுகிறது.
அங்கு இராணுவத்தின் சிங்க படையணியால் இக்குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளும் வீடுகளும் நிர்மாணித்துக் கொள்வதற்கு தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாக இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் அந்த சிங்களப்பத்திகையொன்றுக்குத் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைத் தெரிவு செய்து இவ்வாறு குடியேற்றுவதாகவும் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றும் விவசாயத்துக்காக சுமார் இரண்டு ஏக்கர் வரை வழங்கப்படுவதாகவும் இதுவரை 500 குடும்பங்கள் வரை குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த இராணுவ அதிகாரி அப்பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பான அமைச்சர் குணரத்ன வீரகோன் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ள 500 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேருக்கு வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க முடியுமென தெரிவித்ததாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten