[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 07:09.16 AM GMT ]
வடக்கு கிழக்கு மக்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்களாவர். அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
புலம்பெயர்ந்த தமிழர்களையும் வட, கிழக்கின் அபிவிருத்திக்கு உள்வாங்கிக் கொள்ள முடியும்.
தமிழ் மக்களின் வீடமைப்பு, வாழ்க்கைத்தரம் மற்றும் வாழ்க்கைக்கான சந்தர்ப்பங்களுக்காக கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துடன் கை கோர்த்துக் கொள்ள விரும்புகின்றோம்.
அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்திட்டங்களை மேற்கொண்டால் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். அவ்வாறு ஏற்படும் அபிவிருத்தியின் முழுப் பெருமையும் அரசாங்கத்தையே சாரும்.
எனினும், அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாதகமாக அமைந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, திறந்த நிலையிலான கூட்டணியாக செயற்படுகிறது.
கூட்டமைப்பு, ஜனநாயக வழியில் எவருடனும் இணைந்து செயற்பட தயார். இதற்கிடையில் கூட்டமைப்புக்குள் சில முரண்பாடுகள் உள்ளன எனினும் அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு ஐக்கிய, பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்க சமாதானமான தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிநிற்கிறது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிப்பெறும். எனினும் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தம்மால் ஊகித்து கூறமுடியாது என்று இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைகளில் ஆளுனருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன!- சுமந்திரன்
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 07:17.19 AM GMT ]
மாகாணசபைகளில் ஆளுனருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநருக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்கள் மாகாண அமைச்சரவைக்கு பகிரப்பட வேண்டும்.
எனினும் இலங்கையின் அரசியலமைப்பின்படி, நிறைவேற்று அதிகாரங்கள் ஆளுநரிடம் குவிந்து காணப்படுகின்றது. மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாகாண அமைச்சரவையானது, போதுமானளவு, நிறைவேற்று அதிகாரங்களை கொண்டிருக்கவேண்டும். கூடுதலான அதிகாரங்கள் இருந்தால் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை மேம்படுத்த முடியும்.
இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் மாற்றுத்தீர்வுகளை காண முன்வரவேண்டும்.
இலங்கையின் மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, இந்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten