vrijdag 7 juni 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே 13வது திருத்தத்தில் திருத்தம்!- அரசாங்கம்


காத்தான்குடியில் 15 கிலோ எடையுள்ள பாரிய குண்டு மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 09:01.01 AM GMT ]
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதியோர் இல்ல வீதியிலிருந்து வெடிக்காத நிலையில் 15 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த முதியோர் இல்ல வீதியில் பொதுமக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது வெடிக்காத நிலையில் குண்டு கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குண்டை மீட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி எஸ்.மங்கள தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே 13வது திருத்தத்தில் திருத்தம்!- அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 12:22.06 AM GMT ]
ஒரு வருடகாலம் கடந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கம் இரு யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது.
இத்திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை முன்வைக்க ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு வருடகாலம் கடந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக கூறிய அவர், வடமாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து இந்த திருத்தம் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது 13 வது திருத்தத்தில் அரசாங்கம் முன்னெடுக்க உள்ள திருத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அரசாங்கம் அமைச்சரவைக்கு முன்வைத்த இரு திருத்தங்களின் படி இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்கப்படுகிறது.
தேசிய கொள்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்பிக்க முன்னர் பெரும்பான்மை மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட்டால் சட்டமூலத்தை நிறைவேற்றலாமென மாற்றம் செய்யப்படுகிறது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அகற்றுவது குறித்து அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்று கூறிய அமைச்சர் அவற்றை அகற்றுவது தொடர்பில் கூட்டுக்கட்சிகளிடையே பல்வேறு கருத்துகள் காணப்படுவதாகவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கட்சிகளின் யோசனைகள் குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக இவ்வாறு 13வது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர், வடமாகாண தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten