donderdag 23 mei 2013

19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடாது!- முஸ்லிம் மக்கள் கட்சி!

ரவுப் ஹக்கீம் கலந்துகொள்ளும் இலவச குடிநீர் இணைப்பு நிகழ்வினை த.தே.கூ பகிஷ்கரிப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:31.35 AM GMT ]
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள 100 வறிய குடும்பங்களுக்கு வழங்கவுள்ள இலவச குடிநீர் இணைப்பில் தமிழ் மக்கள் மிக குறைந்தளவானவர்களுக்கே வழங்கப்படவுள்ளதைக் கண்டித்து கல்முனை மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ் நிகழ்வை பகிஸ்கரிப்பதாக மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார். 
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிம் தமிழ் விகிதம் 3:1 என்ற ரீதியில் பகிர்ந்தளித்திருக்கப்பட வேண்டும் என்றும், 9 தமிழ் குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்படுவது நீதியான செயற்பாடு இல்லை என்றும், இது தொடர்பில் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் பயன் ஏதும் கிட்டவில்லை.
இதனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தடை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடாது!- முஸ்லிம் மக்கள் கட்சி
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:41.27 AM GMT ]
மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான சட்டம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 13வது திருத்தச்சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தம் நிலவிய போது மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை எமது கட்சி ஆதரிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தின் படி 1989 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண பொலிசாரில் நாற்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் பொலிசார் தமிழ் பொலிசாரினால் பிரித்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்டதை ஒரு பாடமாகவே நாம் பார்த்தோம்.
இதன் காரணமாக 2006ம் ஆண்டு எமது கட்சியினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்த எமது கட்சியின் அரசியல் தீர்வுக்கான பத்து அம்ச திட்டத்தில் மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தும்படி கோரியிருந்தோம்.
ஆனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள இப்போதுள்ள நிலை என்பது யுத்தமற்ற நிலையாகும். அதே வேளை தமிழ் முஸ்லிம் முறுகல் ஓரளவு நீங்கியுள்ளதோடு நாட்டின் முழு அதிகாரமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனாலும் இனங்களுக்கிடையில் குறிப்பாக சிங்கள முஸ்லிம் இனங்களுக்கிடையில் பாரிய முறுகலும் சந்தேகங்களும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின் ஒரு காலத்திலும் காணாத அளவு தற்போது காண முடிகின்றது.
இதனால் புலிகள் காலத்தில் இடம்பெறாத அளவுக்கு தற்போது தமிழ் பேசும் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை அன்றாடம் காண முடிகிறது. அதே போல் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு நீதியான முறையில் பொலிஸார் செயற்படுவதில்லை என்ற பொதுமக்களின் முறைப்பாடுகளை பரவலாக ஊடகங்களில் காண முடிகிறது.
அதே போல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பன தமிழ் பேசும் மக்களை கொண்டவை என்பதால் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவதனூடாகவே இன ஒற்றுமையையையும், அதிகார தரப்பு பற்றிய மக்களின் சந்தேகங்களையும், அச்சத்தையும் நீக்க முடியும்.
இந்த வகையில் 19வது திருத்த சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்கக்கூடாது என்பது எமது கட்சியின் கோரிக்கையாகும். ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசும், அதாவுள்ளாவும் 18 வது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்து விட்டு, 18வது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை தாம் செய்த மிகப்பெரிய தவறு என புலம்பித்திரிந்தனர்.
எனவே 19வது திருத்த சட்டத்துக்கும் ஆதரவளித்து விட்டு புலம்பலை தொடர்வதை தவிர்த்து எந்த வகையிலும் இதற்கு ஆதரவளிக்க வேண்டாம் என முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது என கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten