woensdag 24 april 2013

புலிகளின் தலைவர்கள் இருவரை மட்டு. சிறையில் சுட்டுக் கொன்றவர் 10 வருடங்களின் பின் பிணையில் விடுதலை!


மட்டக்களப்பு சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இருவரை கொலைசெய்து மற்றுமொரு தலைவரை கொல்ல முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் 10 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்த இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை, நிலாவெளியைச் சேர்ந்த மகேந்திரன் புவிதரன் என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரியவே இரட்டைக்கொலைக் குற்றச்சாட்டில் 10 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தவரை நேற்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்துள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அவரை விடுவித்த நீதிபதி பிணை நிபந்தனைகளை மீறினால் பிணை ரத்துச் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
10 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த காதலனுக்கு அவருடைய காதலி விடுத்த கோரிக்கையை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை அனுபவிக்கும் புவிதரனுடன் தான் பாடசாலை காலத்தில் இருந்தே காதல் கொண்டிருந்ததாகவும், 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவருடைய காதலியான அம்பாறை தம்பிலுவில்லைச் சேர்ந்த அழகரத்னம் கவிதாஞ்ஜனி தனது பிணை மனுவில் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே புவிதரனுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு 20வது வயதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அந்த பிணை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் 2010ம் ஆண்டு நிறைவுற்ற நிலையில் அவருக்கு எதிரான எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை.
இந்நிலையில்,; அவருக்கு வழங்கப்பட்டுள்ள 10 வருடகால சிறைவாசம் நிறைவடைந்து விட்டமையினால் திருமணம் முடிக்கும் வகையில் அவருக்கு பிணை வழங்கவேண்டும் என்றும் அந்த பிணை மனுவில் கோரப்பட்டுள்ளது.
பிணை மனுவை ஆராய்ந்த நீதிபதி பிரதிவாதியை மேற்குறிப்பிட்ட பிணையில் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார்.

Geen opmerkingen:

Een reactie posten