லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபியை தானே சுட்டுக் கொன்றதாக லிபிய புரட்சிப் படையைச் சேர்ந்த போராளியொருவர் கூறும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது. கடாபி உயிருடன் இருப்பதை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் அவரை கொன்றதாக மேற்படி இளைஞர்கூறியுள்ளார். மேற்படி இளைஞனின் பெயர் விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நேட்டோ ஆதரவுகொண்ட புரட்சிப் படையினரால் கைது செய்யப்பட்ட கேணல் கடாபி கொல்லப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என லிபிய இடைக்கால அரசாங்கம் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த வீடியோ வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. "நாம் அவரைப் பிடித்தோம் . நான் அவரின் முகத்தில் தாக்கினேன். போராளிகள் சிலர் அவரை அப்பால் கொண்டு செல்ல முயன்றனர். அப்போதுதான் நான் அவரை சுட்டேன். இரு தடவை தலையிலும் நெஞ்சிலும் சுட்டேன்'" என அந்த இளைஞர் வீடியோவில் கூறியுள்ளார். தனது கூற்றை நிரூபிப்பதற்காக இரத்தம் தோய்ந்த கடாபியின் ஆடை எனக்கூறப்படும் ஆடையொன்றையும் கடாபியினுடையது எனக்கூறப்படும் தங்க மோதிரமொன்றையும் அவர் வீடியோவில் காண்பித்துள்ளார். கடாபியின் சொந்த ஊரான சேர்ட்டே நகரில் கடந்த வியாழனன்று கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட கேணல் கடாபி பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட கேணல் கடாபி தாக்கப்படும் காட்சிகளும் அந்த வீடியோவில் அடங்கியுள்ளன. |
| 26 Oct 2011 |
Geen opmerkingen:
Een reactie posten